சினிமாவிலிருந்து தற்காலிகமாக ஓய்வெடுக்க உள்ளேன்: மீரா ஜாஸ்மின்

எனது தனிப்பட்ட வளர்ச்சிக்காக சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகியிருக்கலாம் என முடிவு செய்துள்ளேன் என்று மீரா ஜாஸ்மின் கூறியுள்ளார்.

தமிழில் ரன் படத்தில் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். பின்னர் விஜய் அஜித்துடன் சேர்ந்து நடித்துள்ளார். விஷாலுடன் நடித்த சண்டைக்கோழி திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றது. பின்னர் தமிழ், மலையாளம் என பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவரது நடிப்பில் படம் 2014இல் வெளியானது குறிப்பிடத்தக்கது. தற்போது 9 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நுழைந்துள்ளார்.

நடிகர்கள் மாதவன், சித்தார்த் நடிப்பில் உருவாகும் ‘டெஸ்ட்’ படத்தில் நடிகை மீரா ஜாஸ்மின் நடிக்க உள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. இப்படத்தை இயக்குநர் சசிகாந்த் இயக்குகிறார். சக்திஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் மீரா ஜாஸ்மின் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது:-

நான் ஏற்கனவே மாதவன், சித்தார்த் உடன் நடித்துள்ளேன். தமிழ்படம், இறுதிச் சுற்று, விக்ரம் வேதா போன்ற படங்களை தயாரித்த சசிகாந்த படத்தில் பங்கு பெற்றது மகிழ்ச்சி. நயன்தாராவுடன் நடிக்க ஆவலாக உள்ளேன். இதுவரை சிறப்பான பயணமாகவே இருந்து வந்துள்ளது. நடிகையாக கொண்டாடப்படுவது மகிழ்ச்சியானது. எனது தனிப்பட்ட வளர்ச்சிக்காக சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகியிருக்கலாம் என முடிவு செய்துள்ளேன். பின்னர் மீண்டும் வந்து பிடித்தமான படங்களில் நடிக்கலாமென திட்டமிட்டுள்ளேன்.

நான் பதிவிடும் பயணம் தொடர்பான எனது சமூக வலைதள புகைப்படங்களுக்கு ரசிகர்களிடமிருந்து நேர்மையான கருத்துகள் வருவது பிடித்துள்ளது. என்னை பின் தொடர்பவர்களுக்கு இதையெல்லாம் பகிர்வதற்கு சமூக வலைதளம் மிகவும் உதவிகரமாக இருந்தது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.