துருவ நட்சத்திரம் படம் வெளியான பிறகு அடுத்து ‘வேட்டையாடு விளையாடு 2’: கௌதம் வாசுதேவ் மேனன்

“துருவ நட்சத்திரம் படம் வெளியான பிறகு கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்களைப் பொறுத்து ‘வேட்டையாடு விளையாடு 2’ பணிகள் தொடங்கும்” என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

கௌதம் வாசுதேவ்மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘வேட்டையாடு விளையாடு’ படம் மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடினர். இது தொடர்பாக இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியதாவது:-

நான் இதை எதிர்பார்க்கவில்லை. ‘நாயகன்’, ‘சத்யா’ படங்கள் திரையரங்குகளில் வெளியானால் நான் சென்று பார்ப்பேன். ஆனால் அந்த அளவுக்கு இந்தப் படம் இருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் பெரிய அளவில் படத்தை ரீ-ரிலீஸ் செய்தார்கள். படத்தின் முதல் நாள் முதலே ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை பார்த்தேன்.

விநியோகஸ்தர்களும் படம் ஹஸ்ஃபுல் என கூறியிருந்தது மகிழ்ச்சியாக இருந்தது. இது எனக்கு சர்ஃப்ரைஸ் தான். ‘வேட்டையாடு விளையாடு’ இரண்டாம் பாகத்தில் ராகவன் கதாபாத்திரத்துக்கும் ராயபுரம் மணி கதாபாத்திரத்துக்கும் ஓப்பனிங் சிங் இருக்கும். அப்படித்தான் எழுதியிருக்கிறேன். கமல்ஹாசனிடமும் கதையை விவரித்திருக்கிறேன். ஸ்கிரிப்ட் வொர்க் முடிந்துவிட்டது. ‘துருவ நட்சத்திரம்’படம் வெளியான பிறகு கமல்ஹாசனின் அடுத்தடுத்த படங்களைப் பொறுத்து ‘வேட்டையாடு விளையாடு 2’ பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் கூறினார்.