அட்லீ தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் இந்தி படத்தில் நடிக்கப் போவதாக தகவல்!

சமீபத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்குடன் விளம்பரப் படம் ஒன்றில் நடித்த கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவுட் நடிகருடன் இந்தி படத்திலேயே நடிக்கப் போவதாக ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன.

தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் அடுத்ததாக பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே பாலிவுட் படத்தில் நடிக்க ஆசைப்பட்டு முடியாமல் போன நிலையில், இந்தமுறை அது மிஸ் ஆகாது என கீர்த்தி சுரேஷ் உறுதியுடன் செம சந்தோஷத்தில் உள்ளார். இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் தயாரிப்பு நிறுவனம் பாலிவுட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்போகும் படத்தில் தான் கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதாகவும் அந்த படத்தை இயக்குநர் காலீஸ் என்பவர் இயக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஷாருக்கானை வைத்து பாலிவுட் படமான ஜவான் படத்தை இயக்கிய அட்லீ அடுத்ததாக இந்தி படம் ஒன்றையே தயாரிக்கப் போகிறார் என்பதே பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, எமி ஜாக்சன் நடித்து வெளியான தெறி படத்தின் இந்தி ரீமேக்காக இந்த படம் உருவாகும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே பாலிவுட்டில் தெறி படத்தை இந்தியில் அட்லீ ரீமேக் செய்யப் போகிறார் என சொல்லப்பட்ட நிலையில், தற்போது அந்த படத்தில் தான் சமந்தா நடித்த ரோலில் கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போகிறார் என்றும் பேச்சுவார்த்தைகள் அடிபட்டு வருகின்றன. சமந்தா உடன் சிட்டாடல் வெப்சீரிஸில் நடித்துள்ள வருண் தவான் தான் இந்தி தெறி ரீமேக்கில் நடிக்கப் போவதாகவும், நடிகை கீர்த்தி சுரேஷ் அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவதாகவும், இன்னொரு பாலிவுட் நடிகை எமி ஜாக்சன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடிய விரைவிலேயே கீர்த்தி சுரேஷின் பாலிவுட் கனவு நனவாகிவிடும் என்றும் கூறுகின்றனர்.