சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் மிருணாள் தாகூர்!

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில் மிருணாள் தாகூர் ஹீரோயினாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டான், பிரின்ஸ் படங்களை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்தார் சிவகார்த்திகேயன். யோகி பாபு நடிப்பில் வெளியாகி பெரிதும் கவனம் ஈர்த்த ‘மண்டேலா’ படத்திற்கு பிறகு மாவீரனை இயக்கினார் மடோன் அஸ்வின். இயக்குனர் மிஷ்கின் வில்லனாக நடித்த இந்தப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் இந்தப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு கேட்கும் அசரீரி குரலுக்காக நடிகர் விஜய் சேதுபதி வாய்ஸ் கொடுத்தார். சம்பளமே வாங்காமல் அவர் செய்த இந்த செயல் கோலிவுட் திரையுலகினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் சாதனை படைத்தது ‘மாவீரன்’.

இந்நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தீனா, ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி போன்ற படங்களை இயக்கி வரவேற்பை பெற்ற ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான ‘தர்பார்’ படம் தோல்வியை சந்தித்தது. இதனையடுத்து தற்போது 3 ஆண்டுகளுக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளார் ஏ.ஆர். முருகதாஸ்.

இந்நிலையில் லேட்டஸ்ட் தகவலாக இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மிருணாள் தாகூர் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ‘சீதா ராமம்’ படத்தில் இளவரசி நூர்ஜஹானாக நடித்து தென்னிந்திய ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்த மிருணாள், ஏ.ஆர். முருகதாஸ் – சிவகார்த்திகேயன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.