இன்று, மாணவர்கள் மற்றும் சமூக சூழலை நினைத்து மனம் பதறுகிறது: ராஜ்கிரண்

நாங்குநேரியில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த 12 ஆம் வகுப்பு மாணவனை சக மாணவர்களே வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், மாணவர்கள் மற்றும் சமூக சூழலை நினைத்து மனம் பதறுகிறது என்று நடிகர் ராஜ்கிரண் கூறியுள்ளார்.

நடிகர் ராஜ்கிரண் பேஸ்புக் பதிவில் கூறியுள்ளதாவது:-

நான் பள்ளியில் படித்த காலங்களில், இந்து, இஸ்லாம், கிருஸ்துவம், போன்று எல்லா மதங்களைச் சார்ந்த மாணவர்களும், பள்ளர், பறையர், தேவர், அருந்ததியர், நாடார், செட்டியார், பிள்ளைமார் போன்று எல்லா சாதிகளைச் சார்ந்த மாணவர்களும் ஒன்றாகத்தான் படித்தோம். யாரும் எவ்வித பேதமும் பார்த்ததில்லை. ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக, ஒரே தாய் பிள்ளைகள் போல் படித்தோம். எங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களும் எல்லா சாதி மதமும் கலந்து தான் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் எவ்வித பேதமும் பார்க்காமல், எல்லா மாணவர்களையும் தங்களின் சொந்தப்பிள்ளைகள் போல், அன்புடனும் அக்கறையுடனும் பயிற்றுவித்தார்கள். இன்று, மாணவர்கள் மற்றும் சமூக சூழலை நினைத்து மனம் பதறுகிறது. இப்படியான சூழல் எப்படி உருவானது ? அந்தக்காலம் போல் இந்தக்காலமும் மாறி விடாதா இறைவா என்று, ஆதங்கப்பட மட்டுமே முடிகிறது.. நாங்குநேரி அவலம்.. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.