சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு: நடிகை நவ்யா நாயரிடம் அமலாக்கத் துறை விசாரணை!

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள வருவாய்த் துறை அதிகாரி சச்சின் சாவந்த், பிரபல சினிமா நடிகை நவ்யா நாயருடன் டேட்டிங்கில் இருந்தது அமலாக்கத் துறை விசாரணையில் தெரியவந்தது.

2001 ஆம் ஆண்டு மலையாள மொழியில் வெளியான நடிகர் திலீப்பின் இஷ்டம் படத்தில் அறிமுகமானார் நவ்யா நாயர். அது போல் அவர் தமிழில் நடிகர் பிரசன்னாவுடன் அழகிய தீயே, சேரனுடன் ராமன் தேடிய சீதை, ரசிக்கும் சீமானே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் பிலிம்பேர் விருதையும் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார். இவர்தான் இந்திய வருவாய்த் துறை அதிகாரி சச்சின் சாவந்த் என்பவருடன் டேட்டிங் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்திய வருவாய்த் துறை அதிகாரியான சச்சின் சாவந்த், 2011 முதல் 2020 ஆம் ஆண்டு வரை இவர் வருமானத்திற்கு அதிகமாக ரூ 2.46 கோடி சொத்து சேர்த்ததாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் சச்சின் சாவந்த் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் வருவாய்த் துறை அதிகாரி சச்சின் சாவந்த் நடிகை நவ்யா நாயருடன் நெருங்கி பழகியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுவரை சச்சின் சாவந்தும் நவ்யா நாயரும் 10 முறை சந்தித்ததாக தெரிகிறது. நவ்யா நாயருக்கு நகை, விலை உயர்ந்த பரிசு பொருட்களை சச்சின் கொடுத்துள்ளதும் தெரியவந்தது. சச்சினிடம் நடத்தப்பட்ட விசாரணையை அடிப்படையாக கொண்டு நவ்யா நாயரிடமும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். அப்போது நவ்யா கூறுகையில், சச்சின் எனக்கு நண்பர் மட்டுமே. எங்களுக்குள் வேறு எந்த உறவும் இல்லை என கூறியிருந்தார்.

சச்சின் சாவந்தின் மற்றொரு பெண் நண்பரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. சச்சின் சாவந்துக்கு எதிராக பணப்பரிவர்த்தனை வழக்குகளை விசாரிக்கும் மும்பை பிஎம்எல்ஏ நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.