நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு வாழ்த்துகள்: விஷால்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு வாழ்த்துகள் என்று நடிகர் விஷால் கூறினார்.

தமிழ் சினிமாவில் முத்திரை பதித்த நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி உள்ளது. அதை மெய்ப்பிக்கும்படியே நலத்திட்ட உதவிகள் வழங்குதல், தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவித்தல் போன்ற செயல்பாடுகளில் தனது மக்கள் இயக்கத்தினரை நடிகர் விஜய் எழுச்சியுடன் ஈடுபட வைத்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய் 10, 12-ம் வகுப்புகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ-மாணவிகளை நேரில் அழைத்து பரிசுகள் வழங்கி பாராட்டி கவுரவித்தார். ஏழை மாணவர்களுக்காக இலவச இரவு நேர படிப்பகங்களும் தொடங்கப்பட்டு உள்ளன. இதனால் அவரது அரசியல் வருகைக்கு வெகு சீக்கிரம் விடை கிடைத்துவிடுமோ.. என அரசியல் நோக்கர்கள் கருதி வருகிறார்கள்.

சமூகசேவைகளிலும், கல்வி சார்ந்த பணிகளிலும் ஆர்வம் காட்டி வரும் விஜய், மக்கள் இயக்கப்பணிகளிலும் கவனம் செலுத்தத் தொடங்கியிருக்கிறார். அதன் படி விஜய் மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகளுடன் அவ்வப்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து நடிகர் விஷாலிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதில் அளித்த நடிகர் விஷால், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் அவருக்கு வாழ்த்துகள். விஜய் நல்லது செய்ய வேண்டும் என ஒரு வாக்காளராக நினைக்கிறேன்’ என்றார். மேலும், தேசிய திரைப்பட விருதுகள் உட்பட எந்த விருதுகளின் மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது என்றும் விஷால் கூறினார்.