ஒரே நாடு ஒரே வெங்காயம்-னு எதுக்கு பேசுறீங்க: மன்சூர் அலிகான்

காவிரி விவகாரம் தொடர்பாக பேசிய நடிகர் மன்சூர் அலிகான் கர்நாடகா அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். பொதுமறையாக இருக்கும் தண்ணீரை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்றும், உண்மையை அறிய நேரில் சென்று பார்க்குமாறும் கேட்டுக் கொண்டார்.

தமிழ்நாடு – கர்நாடகா ஆகிய இருமாநிலங்களும் காவிரி நீருக்காக மல்லுக்கட்டி வருகின்றன. இதற்காக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம், மத்திய அரசு என ஏறாத படிகள் இல்லை. வைக்காத கோரிக்கைகள் இல்லை. பருவமழை பொய்க்கும் போதெல்லாம் விஸ்வரூபம் எடுக்கும் காவிரி பிரச்சினை, தற்போதும் சூடுபிடித்துள்ளது. இதில் இருமாநில அரசுகள் மாறி மாறி மோதிக் கொள்ள, இடையில் விவசாயிகள் படும் பாடு தான் திண்டாட்டமாக இருக்கிறது. காவிரி விஷயத்தை வாய் திறக்காத அரசியல் தலைவர்களே இல்லை. மேலும் பிரபலங்களும் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிவாஜி கணேசனின் 96வது பிறந்த நாளை ஒட்டி அவரது நினைவு மண்டபத்தில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிவாஜி குடும்பத்தினர் உள்ளிட்ட பலரும் நேரில் வந்து மரியாதை செலுத்தினர். அந்த வரிசையில் நடிகர் மன்சூர் அலிகான் வருகை புரிந்தார். அவர் புறப்பட்டு செல்லும் போது செய்தியாளர்களின் கேள்விகளுக்குள் சிக்கிக் கொண்டார். மன்சூர் அலிகான் எப்போதுமே மனதில் பட்டதை சட்டென போட்டு உடைத்துவிடுவார். விமர்சிக்க வேண்டும் என்று நினைத்துவிட்டால் யாரையும் விட்டு வைக்க மாட்டார். யதார்த்தமான நடை அவரது பேச்சில் வெட்ட வெளிச்சமாகவே இருக்கும்.

காவிரி விஷயத்தில் உங்களின் கருத்து என்னவென்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, உங்க நிலைப்பாடு என்ன? என்று பதிலடியாக கேட்டு திணறடித்தார். பின்னர் பேசுகையில், “தண்ணீர் அப்படிங்கிறது உலகப் பொதுமறை. உயரமான இடத்தில் பிறக்கும் தண்ணீர் கடைசியில் கடலில் போய் கலக்கிறது. இடையில் எந்தெந்த நாடு, எந்தெந்த மாநிலம், எந்தெந்த மொழி பேசக்கூடிய மக்கள், விலங்குகள், சிறிய ஜீவராசிகள் இருக்கிறார்களோ, அவர்கள் அனைவருக்கும் பொதுவானது தான் தண்ணீர். அதை வைத்து அரசியல் பண்ணுவது அயோக்கியத்தனம், மடத்தனம், முட்டாள்தனம். இதை எல்லாருமே செஞ்சிட்டு இருக்காங்க. இன்னொரு விஷயம். நீங்க போய் ஒரு ஹெலிகாப்டரை எடுத்துக்கோங்க.

கர்நாடகா டேமை போய் பாருங்க. அப்படியே தகதகனு தண்ணீர் மின்னுது. ஒரு டேம்ல இல்ல, எல்லா டேம்லயும் தான். ஆனா ஒரு சொட்டு கூட கொடுக்க மாட்டேங்குறாங்க. அப்புறம் எதுக்கு ஏக இந்தியா. அதென்னது அது. ஆ… ஒரே நாடு ஒரே வெங்காயம்-னு எதுக்கு பேசுறீங்க? ஆளை விடுங்க” என்று கூறினார்.