இதுவரை நான் நடித்ததில் சவாலான ஒன்று ‘தங்கலான்’ படம்: மாளவிகா மோகனன்!

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ படம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் பகிர்ந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘தங்கலான்’ படம் உருவாகி வருகிறது. தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து அசத்தி வருபவர் விக்ரம். கடைசியாக ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் நடித்திருந்தார். மணிரத்னம் இயக்கத்தில் மல்டி ஸ்டார் படமாக ரிலீசான இதில் ஆதித்ய கரிகாலனாக விக்ரம் நடித்திருந்தார். இதனையடுத்து தற்போது பா. ரஞ்சித்துடன் இணைந்துள்ளார் விக்ரம்.

கோலிவுட் சினிமாவில் அடுத்தடுத்து சமூக நீதி பேசும் படங்களை இயக்கி வருகிறார் ரஞ்சித். இவரது படங்கள் தொடர்ச்சியாக சமூகத்தில் பல வித விவாதங்களை கிளப்பி வருகின்றன. கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான ‘நட்சத்திரம் நகர்கிறது’ படம் தற்கால காதல் குறித்த பல கோணங்களை பேசி இருந்தது. இந்நிலையில் விக்ரமும், ரஞ்சித்தும் இணைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. பிரம்மாண்டமாக உருவாகி இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக மும்முரமாக நடந்து வந்தது. படத்தின் மேக்கிங் வீடியோ எல்லாம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்திருந்தது.

இந்நிலையில் ‘தங்கலான்’ படம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் கொடுத்துள்ள அப்டேட் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ரசிகர்களுடன் எக்ஸ் தளத்தில் உரையாடிய மாளவிகா மோகனன், இதுவரை நான் நடித்ததில் சவாலான ஒன்று ‘தங்கலான்’ படம். எனக்குள் அவ்வளவு ஒரு உத்வேகத்தை கொடுத்தது இப்படம். எனது நடிப்பு இப்படத்தில் உங்களுக்கு கட்டாயம் பிடிக்கும் என எதிர்பார்க்கிறேன். அவ்வளவு அர்த்தம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

‘தங்கலான்’ படத்தில் விக்ரமுடன் பசுபதி, பார்வதி, மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டஜிரோனோ உள்ளிட்ட பலர் இணைந்து நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயல் பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தை அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.