சோஷியல் மீடியாவில் வன்மத்தை மட்டும் கக்குறாங்க: மணிரத்னம்!

சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் மணிரத்னம் சோஷியல் மீடியா பற்றி பேசியுள்ளார். அவர் பேசியது தற்போது வைரலாகி வருகின்றது

தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய திரையுலகிலேயே முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் மணிரத்னம். கடந்த 35 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் இருக்கும் மணிரத்னம் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றாற்போல படமெடுத்து வருகின்றார். அதன் காரணமாகவே இன்றைக்கும் அவர் ட்ரெண்டில் இருந்து வருகின்றார். மௌன ராகம் படத்தில் துவங்கி பல காலத்தால் அழியாத காவிய படங்களை உருவாக்கியுள்ளார் மணிரத்னம். ஸ்டைலிஷாக கிளாசியாக மணிரத்னத்தின் படங்கள் இருக்கின்றன. இவரின் படங்களில் நடிகர்கள் நடிகைகள் மட்டுமல்லாமல் ஒவ்வொரு காட்சியும் அழகின் உச்சமாக இருக்கும். அந்த அளவிற்கு தன் படத்தின் காட்சிகளை பார்த்து பார்த்து செதுக்குவார் மணிரத்னம்.

கடந்தாண்டு மணிரத்னத்தின் இயக்கத்தில் அவரின் கனவு படமான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தின் மூலம் இந்திய திரையுலகையே பெருமைப்பட செய்தார் மணிரத்னம். மிகப்பெரிய பட்ஜெட்டில் மாபெரும் நட்சத்திர பட்டாளங்களை வைத்து குறுகிய காலகட்டத்தில் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக உருவாக்கினார் மணிரத்னம்.

தற்போது உலகநாயகன் கமல்ஹாசனை வைத்து தக் லைப் என்ற படத்தை இயக்கி வருகின்றார். நாயகன் படத்திற்கு பிறகு 35 ஆண்டுகள் கழித்து கமல் மற்றும் மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இயக்குநர்களுக்கான ரவுண்டேபிள் கான்ஃபிரன்ஸ் நிகழ்ச்சி பிரபல யூடியூப் சேனலில் நடைபெற்ற நிலையில், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், மணிரத்னம், சுதா கொங்கரா உள்ளிட்ட பல இயக்குநர்கள் அதில் கலந்து கொண்டு பேசியுள்ளனர். சோஷியல் மீடியாவில் நடைபெறும் சண்டைகள் மற்றும் அதில் பரப்பப்படும் ஹேட்ரட் தொடர்பாகத்தான் இயக்குநர்கள் அதில் ஒரு டாப்பிக்காக எடுத்து விவாதம் செய்துள்ளனர். அதில், குறிப்பாக விஜய் – அஜித் என ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்வதும், பாக்ஸ் ஆபிஸ் நம்பர்களுக்காக அடித்துக் கொள்வதும் சரியான அணுகுமுறையா? என மணிரத்னம் கேள்வி எழுப்பி உள்ளார்.

சமூக வலைதளங்களை இளைஞர்கள் தங்களை ஆள்பவர்களுக்கு எதிராக தினமும் கேள்வி கேட்க ஒன்று திரண்டு பயன்படுத்தினால் பல நல்லது நடக்கும் என்றும், அதை விடுத்து விட்டு நடிகர்களை பற்றி பேசுவதும், நடிகர்களுக்காக சண்டை போட்டுக் கொள்ளும் இடமாக அதனை மாற்றி வைத்துள்ளனர். இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் சமீபத்தில் பேசும் போது சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் venom (விஷம்) மட்டும் தான் கக்குறான் என குறிப்பிட்டுள்ளார். திருநெல்வேலி, நாகர்கோயிலில் படம் எத்தனை கோடி வசூல் செய்தது என்பதை பற்றி பேசல, படம் நல்லா இருக்கா நல்லா இல்லையான்னு மட்டும் தான் பேசுறாங்கன்னு நீங்க சொல்லித்தான் எனக்கு தெரியுது. அது நல்லா இருக்கு.. ஆனால், தெருவுல இறங்கி சண்டை போடுறது மாதிரி கேவலமா சண்டை போடுறது தேவையில்லாத ஆணி என நறுக்கென பேசியுள்ளார்.

மேலும், அஜித் பிடிக்கும் என்றும் விஜய் பிடிக்கும் என்றும் ஆரோக்கியமே இல்லாமல் படு மோசமாக கெட்ட கெட்ட வார்த்தைகளால் சண்டை போட்டுக் கொள்வது எல்லாம் நல்லாவா இருக்கு என மணிரத்னம் கேள்வி எழுப்பி உள்ளார்.