மாரி செல்வராஜின் அடுத்த படம் ‘வாழை’ ஓடிடி தளத்தில் விரைவில் ரிலீஸ்!

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக சமூக அக்கறை கொண்ட படங்களை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். கடைசியாக இவரது இயக்கத்தில் ‘மாமன்னன்’ படம் வெளியாகி இருந்தது. ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில் மாரி செல்வராஜின் அடுத்த படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் ‘பரியேறும் பெருமாள்’ படம் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆனவர் மாரி செல்வராஜ். கதிர், கயல் ஆனந்தி நடிப்பில் வெளியான இவரது முதல் படமே விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தனது இரண்டாவது படத்திலே தனுஷை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றினார். இவர்கள் கூட்டணியில் ‘கர்ணன்’ படம் வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த இரண்டு படங்களையும் சமூக நீதி பேசும் படங்களாக இயக்கி வரவேற்பை பெற்றார். இதனையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘மாமன்னன்’ படம் உருவானது. வடிவேலு, உதயநிதி, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜுன் மாதம் இப்படம் வெளியாகி ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது.

தனது கடைசி படத்தை மாரி செல்வராஜ் தான் இயக்க வேண்டும் என்று விருப்பப்பட்டு அவருடைய இயக்கத்திலே நடித்தார் உதயநிதி ஸ்டாலின். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசையமைத்திருந்தார். இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘வாழை’ படம் வெளியாக இருக்கிறது. ‘மாமன்னன்’ படத்தின் ஷுட்டிங்கின் போதே ‘வாழை’ படத்தையும் இயக்கி முடித்தார் மாரி செல்வராஜ். இதற்கான படப்பிடிப்பை கடந்த வருடம் நவம்பர் மாதம் உதயநிதி துவங்கி வைத்தார். ‘வாழை’ படம் முழுக்க முழுக்க சிறுவர்களை முக்கிய கதாபாத்திரங்களாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, வெயில், பிரியங்கா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ‘வாழை’ பட ரிலீஸ் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. ‘மாமன்னன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாவதால், படத்தில் அழுத்தமான பல காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.