த்ரிஷா விவகாரம் பூதாகரமாகி வரும் நிலையில் பாடகி சின்மயி ராதாரவியை வம்புக்கு இழுத்துள்ளார்!

நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து மோசமான வகையில் பேசியதற்கு ஒட்டு மொத்த திரையுலகமும் ஒன்று திரண்டு கண்டனம் தெரிவித்து வருகிறது. சோஷியல் மீடியாவில் எந்த பக்கம் பார்த்தாலும், இந்த பிரச்சனை தலைவிரித்தாடுகிறது.

இந்த நிலையில் பிரபல பாடகி சின்மயி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

அனைவரும் மன்சூர் அலி கானை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதில் தற்போது நிறைய மாற்றம் தெரிகிறது. உண்மையில் இது ஒரு நல்ல விஷயம், சாக்கடையை புறக்கணிப்போம் என்று சொல்வதை விடுத்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்வது அவசியம் என்று அதிகாரத்தில் உள்ளவர்கள் பார்க்கிறார்கள். ஆனால் நயன்தாரா தனது சொந்த படத்தின் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொண்ட போது ராதாரவி அவரை அவதூறாக பேசினார். அவர் பேசி 2 நாட்கள் ஆனபோதும் யாரும் இதை கண்டிக்கவில்லை, யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை, விளக்கம் கொடுங்கள், மன்னிப்பு கேட்கவில்லை, தேசிய மகளிர் ஆணையம் தானாக முன் வந்து விசாரிக்கவில்லை. அப்போது திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பின் பாஜகவில் இணைந்து மீண்டும் நயன்தாராவை அவதூறாகப் பேசினார். அப்போதும் தேசிய மகளிர் ஆணையம் அதை கண்டுக்கொள்ளவில்லை. சமூக வலைதளங்களில் பலர் கண்டனம் தெரிவித்தனர். ஆனால் த்ரிஷா விவகாரத்தில் பலரும் வெளிப்படையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த போக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. ஏன் என்றால், நிறைய ஆண்கள் தாங்கள் பணிபுரியும் இடத்தில் இருக்கும் பெண்களைப் பற்றி இப்படி தான் பேசுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நயன்தாரா நடித்த கொலையுதிர்காலம் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ராதாரவி நயன்தாராவை மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்திருந்தார். இதற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விக்னேஷ் சிவன், விஷால் என பலர் தங்களது கண்டனத்தை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.