வெள்ள நிவாரணத்துக்கு வடிவேலு ரூ.6 லட்சம் நன்கொடை!

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து நடிகர் வடிவேலு நன்கொடை வழங்கி உள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணத் தொகை அறிவித்துள்ளது. மேலும், சினிமா நடிகர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் என பலரும் வெள்ள நிவாரணத்துக்கு நன்கொடை வழங்கி வருகின்றனர். மக்கள் கஷ்டப்படுவதை பார்த்து முதல் ஆளாக நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் இணைந்து 10 லட்சம் நன்கொடை வழங்கினர். அவர்களைத் தொடர்ந்து பார்க்கிங் படத்தின் வெற்றியால் சந்தோஷத்தில் இருக்கும் ஹரிஷ் கல்யாண் 1 லட்சம் நன்கொடை வழங்கினார். சமீபத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் மற்றும் சூரி என வரிசையாக நடிகர்கள் தலா 10 லட்சம் ரூபாயை நன்கொடையாக சென்னை மக்கள் துயர் துடைக்க வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வைகைப்புயல் வடிவேலு நன்கொடை வழங்கி உள்ளார். “மிக்ஜாம் புயல் மற்றும் கன மழையால் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க, கழக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், அரசின் மீட்பு – நிவாரணப் பணிகளுக்கு உதவிடும் வகையில், ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைக்கலைஞர் அண்ணன் வடிவேலு அவர்கள் ரூ.6 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்” என உதயநிதி ஸ்டாலினை போட்டோவை ஷேர் செய்து டுவீட் போட்டுள்ளார்.