ஜாம்நகருக்கு மனைவியுடன் ஆனந்த் அம்பானி திருமணத்திற்கு வந்த ரஜினி!

முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும் தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள் ராதிகா மெர்சன்டிற்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ள நிலையில், மார்ச் 1ந் தேதியில் இருந்து மார்ச் 3ந் தேதி வரை ப்ரீ வெட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் ஜாம்நகர் வந்திறங்கினார்.

ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ப்ரி வெட்டிங் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் கிரீன் காம்ப்ளக்ஸில் பிரம்மாண்ட நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் உலக அளவில் புகழ்பெற்ற பாப் படகியான ரிஹானாவின் கச்சேரியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாடுவதற்காக ரிஹானாவுக்கு 52 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேற்று நடைபெற்ற இசைநிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அமைந்ததாகவும், மீண்டும் இந்தியா வர விரும்புவதாகவும் தெரிவித்து விட்டு ஜாம்நகர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார் ரிஹானா.

இதில் கலந்த கொள்வதற்காக இந்தியாவில் உள்ள திரை நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் மட்டுமின்றி, உலக அளவிலான தொழிலதிபர்கள், அரசியல், சினிமா பிரபலங்களும் விழாவில் பங்கேற்கவுள்ளனர். நடிகர் சல்மான் கான், ஷாருக்கான், தீபிகா படுகோனே, ரன்வீர் கபூர், ரன்வீர் சிங் ஆலியா பட், மாதுரி தீட்சித், வருண் தவான், அனில் கபூர், சாரா அலி கான், இப்ராகிம் அலி கான், அனன்யா பாண்டே மற்றும் ஆதித்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த ப்ரீ வெட்டிங் விழாவில் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் அட்லி தனது மனைவி பிரியா மற்றும் குழந்தையுடன் கலந்து கொண்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஆனந்த் அம்பானி திருமணத்தில் பங்கேற்க மனைவி லதா மற்றும் ஐஸ்வர்யாவுடன் ஜாம்நகர் வந்துள்ளார். அப்போது அங்கு கூடி இருந்த ரசிகர்களுக்கு கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது பத்திரிக்கையாளர் ஜாம்நகர் உங்களை வரவேற்கிறது என்று சொல்ல, நன்றி நன்றி என்றார்.