நடிகர் அஜித்தின் காதுக்கும், மூளைக்கும் செல்லும் நரம்பில் அறுவை சிகிச்சை!

நடிகர் அஜித்தின் காதுக்கும், மூளைக்கும் செல்லும் நரம்பில் இருந்த வீக்கம் அறுவை சிகிச்சை மூலம் நேற்று சரிசெய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் தற்போது ‘விடாமுயற்சி’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். ‛விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அஜர்பைஜான் நாட்டில் நடந்து வருகிறது. இதனால் அடிக்கடி அஜித் அஜர்பைஜான் சென்று வருகிறார். மேலும் படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் நடிகர் அஜித் பிற இடங்களை சுற்றி பார்த்து வருகிறார். இந்நிலையில் தான் நேற்று காலையில் அஜித் குமார் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைகளுக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இரவில் வேறு தகவல் வெளியானது. அதாவது மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் அவரின் காது-மூளைக்கு இடையே செல்லும் நரம்பில் வீக்கம் இருந்ததாகவும், அதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும்அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் பெரியகருப்பன் தலைமையில் நடிகர் அஜித்திற்கு அறுவைசிகிச்சை மேற்கொண்டு நரம்பில் இருந்த வீக்கம் என்பது சரிசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் அவர் டாக்டர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து நடிகர் அஜித் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் வலைதளங்களில் பிரார்த்தனையை தொடங்கினர்.

இந்நிலையில் தான் நடிகர் அஜித்தின் உடல்நலம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது நடிகர் அஜித்தின் காதுக்கும், மூளைக்கும் செல்லும் நரம்பில் இருந்த வீக்கம் அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் ஐசியூ எனும் தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர் கண்காணிப்பில் இருந்தார். தற்போது அவரது உடல்நலனில் எந்த பிரச்சனையும் இல்லை. அவர் நலமாக உள்ளார். உடல்நலம் சீராக உள்ளது. இதனால் சாதாரண சிகிச்சை பிரிவுக்கு அவர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் இன்று அல்லது நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் அஜித் வரும் 15ம் தேதி அஜர்பைஜானில் ‛விடாமுயற்சி’ படப்பிடிப்பில் பங்கேற்க ஏற்கனவே திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் படப்பிடிப்பில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் தான் நடிகர் அஜித்தின் உடல்நலம் வேகமாக சீராகி விடுவதால் திட்டமிட்டபடி வரும் 15ம் தேதி அஜர்பைஜானில் நடக்கும் ‛விடாமுயற்சி’ படப்பிடிப்பில் அவர் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.