அரிய வகை நோயால் அவதிப்படும் சுருதிஹாசன்!

நான் “பிசிஓஎஸ்” என்ற அரிய வகை நோயால் அவதிப்படுகிறேன் என்று சுருதிஹாசன் கூறியுள்ளார்.

சுருதிஹாசன் நடிப்பில் கடந்த வருடம் தெலுங்கில் 4 படங்கள் வெளியானது. தற்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் டெகாய்ட் மற்றும் சலார் 2 படங்கள் கைவசம் வைத்துள்ளார். சென்னை ஸ்டோரி என்ற படத்திலும் நடிக்கிறார். மும்பையை சேர்ந்த ஓவியக்கலைஞரை காதலித்து சமீபத்தில் காதலை முறித்துக்கொண்டார். இந்த நிலையில் அரியவகை வியாதியால் அவதிப்படுவதாக தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து சுருதிஹாசன் கூறியதாவது:-

நான் “பிசிஓஎஸ்” என்ற அரிய வகை நோயால் அவதிப்படுகிறேன். இதனால் மாதவிடாய் பிரச்சினை ஏற்பட்டு வேலைகளை சரியாக செய்ய முடியவில்லை. இதன் காரணமாக நிறைய விஷயங்களை இழந்து இருக்கிறேன். கோடிக்கணக்கான ரூபாயை முதலீடு செய்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்களிடமும், இயக்குனர்களிடமும் எனக்கு இருக்கும் பிரச்சினையை சொல்லி படப்பிடிப்பை இன்னொரு நாளில் வைத்துக்கொள்ளுங்கள் என்று சொல்ல முடியாது. வேதனையை பொறுத்துக்கொண்டு படங்களில் சண்டை காட்சியானாலும், பாடல் காட்சிகளானாலும் சிரித்தபடி நடித்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.