‘என்றும் என் நினைவில் பாலு.. மிஸ் யூ’: இளையராஜா!

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் பிறந் தநாளையொட்டி இசையமைப்பாளர் இளையராஜா உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

மறைந்த பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் 74வது பிறந்தநாள் நேற்று. கடந்த 2020 அன்று கொரோனா காலக்கட்டத்தில் எஸ்.பி.பி. மறைந்தது திரையுலகிற்கே பேரிழப்பாக அமைந்தது. எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உற்ற நண்பரும் இசையமைப்பாளருமான இளையராஜா, எஸ்.பி.பி-யின் பிறந்தநாளில் நினைவு கூர்ந்திருக்கிறார். அவரது எக்ஸ் பக்கத்தில், ‘என்றும் என் நினைவில் பாலு.. மிஸ் யூ’ என உருக்கமாகப் பகிர்ந்துள்ளார்.

திரையுலகில் இளையராஜா இசையமைப்பில் ‘மன்றம் வந்த தென்றலுக்கு’, ‘சுந்தரி கண்ணால் ஒரு சேதி’ உள்ளிட்ட ஏராளமான ஹிட் பாடல்களைப் பாடியிருக்கிறார். அவர் மறைவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தேம்பி அழுத இளையராஜா, அவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்று எஸ்.பி.பி. மறைந்த சமயத்தில் திருவண்ணாமலையில் மோட்ச விளக்கு ஏற்றி நெகிழ வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.