குடும்பத்துடன் சென்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த சரத்குமார்!

ராதிகா சரத்குமார் இன்று குடும்பத்தினருடன் சென்று தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்துள்ளார்.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ராதிகா சரத்குமார், விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவர் மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதுமே பாஜக தோல்வியைச் சந்தித்தது. தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு தான், சரத்குமார், தனது சமத்துவ மக்கள் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்தார். இதையடுத்து ராதிகா சரத்குமாருக்கு விருதுநகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது பாஜக. சரத் குமாருக்கும், அவரது முதல் மனைவி சாயாவிற்கும் பிறந்தவரான வரலட்சுமி நடிகையாக தனது பயணத்தை துவங்கி தனக்கென ஒரு தனிப்பாதையை தேர்ந்தெடுத்து வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். வரலட்சுமிக்கும் அவரது நீண்டநாள் நண்பரான நிக்கோலஸ் சச்தேவிற்கும் வரும் ஜூலை இரண்டாம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. தாய்லாந்தில் திருமணமும், சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதையடுத்து தற்போது வரலட்சுமி சரத்குமார் குடும்பத்தினர் திரையுலகை சேர்ந்த நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் வாக்குப்பதிவு தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி முடிந்ததுமே திருமண வேலைகளில் பிஸி ஆனார்கள் சரத்குமாரும், ராதிகாவும். தற்போது தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பிரபலங்கள், நண்பர்களுக்கு குடும்பத்துடன் நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்து வருகின்றனர். அந்தவகையில் தான், தற்போது தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வரலட்சுமி திருமண அழைப்பிதழை வழங்கி உள்ளனர். சரத் குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி உள்ளிட்ட குடும்பத்தினர் முதல்வர் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலினுக்கு அழைப்பிதழ் வைத்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் சரத்குமார், ராதிகா சரத்குமார், வரலட்சுமி ஆகியோர் தனித்தனியாக புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளனர். வரலட்சுமி தன்னுடைய எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இந்தப் புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.