தனியா வரச் சொன்ன பிரபல நடிகர்: இஷா கோபிகர்!

18 வயதில் தன்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்ததாக நடிகை இஷா கோபிகர் தெரிவித்துள்ளார். மேலும் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர் தன்னை தனியாக வரச் சொன்னதாகவும் கூறியிருக்கிறார்.

பிரசாந்தின் காதல் கவிதை படம் மூலம் கோலிவுட் வந்தவர் பாலிவுட் நடிகை இஷா கோபிகர்.நெஞ்சினிலே படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.தமிழ் திரையுலகிற்கு வந்த வேகத்தில் ரசிகர்களை கவர்ந்தார். அழகாக இருப்பதுடன் நடிக்கத் தெரிந்தவர் என பெயர் எடுத்தார். 2001ம் ஆண்டு வெளியான நரசிம்மா படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான அயலான் படம் மூலம் மீண்டும் கோலிவுட் வந்திருக்கிறார்.

நடிகைகளை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அது இஷா கோபிகருக்கும் நடந்திருக்கிறது. பேட்டி ஒன்றில் இஷா கோபிகர் கூறியிருப்பதாவது:-

நடிகர்கள், ஹீரோக்கள் போன்று நடிகைகளால் தங்களுக்கு பிடித்ததை தேர்வு செய்ய முடியாது. நான் ஹீரோயினாக நடித்தபோது இருந்த பல நடிகைகள் திரையுலகை விட்டு விலகிவிட்டார்கள். ஒரு சிலர் தான் இன்னும் திரையுலகில் இருக்கிறார்கள்.சினிமாவை விட்டு விலகாத நடிகைகளில் நானும் ஒருத்தி.

எனக்கு 18 வயது இருந்தபோது உதவியாளர் ஒருவரும், நடிகர் ஒருவரும் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தார்கள். பட வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால் நடிகர்களுடன் நட்பாக இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறினார்கள். நான் அனைவரிடமும் நட்பாக பழகுவேன். அப்படி இருக்கும்போது இந்த ஃப்ரெண்ட்லிக்கு அர்த்தம் என்னவென்று யோசித்தேன். எனக்கு 23 வயது இருந்தபோது இந்தி திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர் ஒருவர் தன்னை தனியாக வந்து சந்திக்குமாறு கூறினார். அவருக்கும் பல நடிகைகளுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரவியதால் என்னை தனியாக வரச் சொல்வதாக கூறினார். ஆனால் நான் வர மாட்டேன் என்று கூறிவிட்டேன். அது மட்டும் அல்ல நடிகர்களின் உதவியாளர்கள்,இயக்குநர்கள் என்னை கண்ட இடத்தில் தொட்டது உண்டு. நடிகர்களுடன் நட்பாக இருக்க வேண்டும் என்று சொல்லி என் கையை பிடித்து அழுத்துவார்கள்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.