பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேரும் சமந்தா!

சினிமாவில் இருந்து பிரேக்குக்கு பின்னர் தனது கம்பேக் பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்து, பாலிவுட்டில் பிரமாண்ட என்ட்ரி கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்த இருக்கிறார் சமந்தா.

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. மயோசிடிஸ் என அரிய வகை நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, இடையில் சில காலம் சினிமாவுக்கு பிரேக் எடுத்துவிட்டு தற்போது மீண்டும் நடிப்பு பக்கம் திரும்பியுள்ளார். சமந்தாவின் கம்பேக் ரிலீசாக சிட்டாடல்: ஹனி பன்னி என்ற வெப் சீரிஸ் வெளியாக இருக்கிறது. இந்தி வெப்சீரிஸான இதில் பாலிவுட் நடிகர் வருண் தவானுடன் இணைந்து நடித்துள்ளார். ஹாலிவுட்டில் ரிச்சர்ட் மேடன் – பிரியங்கா சோப்ரா நடித்து வெளியான ஆக்‌ஷன் த்ரில்லர் வெப்சீரிஸான சிட்டாடல் இந்திய பதிப்பாக சிட்டாடல்: ஹனி பன்னி இந்தியில் உருவாகியுள்ளது. தமிழ், தெலுங்கு உள்பட பிற மொழிகளிலும் இந்த சீரிஸ் அமேசான் ப்ரைமில் ஸ்டிரீம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிட்டாடல் வெப் சீரிஸுக்கு முன்னதாகவே தி பேமிலி மேன் சீசன் 2 சீரிஸில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சமந்தா. அத்துடன் விண்ணைதாண்டி வருவாயா படத்தில் சிறிய கேமியோ கதாபாத்திரத்திலும் தோன்றியிருந்தார்.

இதைத்தொடர்ந்து தற்போது முதல் முறையாக பாலிவுட் படம் ஒன்றில் நடிகை சமந்தா கதாநாயகியாக நடிக்கவுள்ளாராம். இந்த படத்தை முன்னபாய் எம்பிபிஎஸ், 3 இடியட்ஸ், பிகே போன்ற சூப்பர் ஹிட் பாலிவுட் படங்களின் இயக்குநரான ராஜ்குமார் ஹிரானி இயக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன் மற்றொரு முக்கிய விஷயமாக இந்த படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் கதையின் நாயகனாக நடிக்கவுள்ளார் எனவும் கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையென்றால் சமந்தாவின் பாலிவுட் என்ட்ரி பிரமாண்டமாக அமையும். பாலிவுட் ரசிகர்களுக்கும் ஷாருக் கான் – சமந்தா ஜோடி புதுவிதமான ட்ரீட்டாக இருக்கும் என பரபரப்பாக பேசப்படுகிறது.

கடந்த ஆண்டில் ஷாருக்கான் – ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் வெளியான டங்கி படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கியது. இருப்பினும் ராஜ்குமார் ஹிரானியின் முந்தைய படங்களின் வசூலை ஒப்பிடுகையில் இது குறைவானதாகவே பார்க்கப்படுகிறது. எனவே ஷாருக்கான் – சமந்தா என்கிற புதிய ஜோடியை வைத்து ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தை உருவாக்க ராஜ்குமார் ஹிரானி முடிவு செய்துள்ளராம். இந்த படம் ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாகவும் இருக்கும் எனவும் விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.