மகேஷ்பாபு, பிரபாஸுடன் நடிக்க வேண்டும்: ராஷி கன்னா!

மகேஷ்பாபு, பிரபாஸுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என்று ராஷி கன்னா கூறியுள்ளார்.

ராஷி கன்னா நடித்து சமீபத்தில் வெளியான ‘அரண்மனை 4’ வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து இந்தியில் ‘த சபர்மதி ரிப்போர்ட்’, தெலுங்கில் ‘தெலுசு கடா’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான ‘ஊஹலு குசகுசலாடே’ என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதில் நாக சவுரியா ஹீரோவாக நடித்திருந்தார்.

இந்தப் படம் வெளியாகி 10 வருடம் ஆனதை அடுத்து ராஷி கன்னா அளித்த பேட்டியில், பிரபாஸுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, “மகேஷ்பாபுவுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை பலமுறை தெரிவித்துவிட்டேன். திரையில் எங்கள் ஜோடி பொருத்தம் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்து பிரபாஸுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. அவருடைய ‘கல்கி 2898 ஏடி’ படத்தை நானும் எதிர்பார்க்கிறேன். ‘த சபர்மதி ரிப்போர்ட்’ படத்தில் விக்ராந்த் மாசேயுடன் நடித்துள்ளேன். இது 2002-ம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த உண்மைச் சம்பவங்களை கொண்டு உருவாகி இருக்கிறது” என்றார்.