அதிதி ஷங்கர் நடிக்கும் ‘நேசிப்பாயா’ முதல் தோற்றம் வெளியீடு!

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாகும், ‘நேசிப்பாயா’ படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

மறைந்த நடிகர் முரளியின் மகனும் நடிகர் அதர்வாவின் சகோதரருமான ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகும் படத்தை விஷ்ணுவர்தன் இயக்கியுள்ளார். இதில் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர் நிறுவனம் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ‘நேசிப்பாயா’ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

அட்வென்சர் காதல் கதையாக இந்தப் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் முதல் தோற்ற வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை நயன்தாரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இதில் ‘நேசிப்பாயா’ படத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டது.

முன்னதாக இப்படம் பற்றி விஷ்ணுவர்தன் கூறும்போது, “ஆகாஷ் முரளி திறமையான நடிகர். தனது நடிப்புத் திறனை சிறப்பாக மெருகேற்றியுள்ளார். இந்தப் படம் சாகச காதல் கதையாக இருக்கும். காதலில் உள்ளவர்கள், காதலித்தவர்கள், காதலிக்கப் போகிறவர்கள் அனைவரையும் ஈர்க்கும் விதமாக இந்தப் படம் இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.