சேலை தான் எனக்கு சவுகரியமான உடை: சாய்பல்லவி!

அதிக மன அழுத்தங்கள் இருக்கும் இடங்களிலும் சேலை அணிவதையே விரும்புகிறேன் என்று சாய்பல்லவி கூறியுள்ளார்.

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் நாயகியாக நடித்து பிரபலமான சாய் பல்லவி, இப்போது அனைத்து மொழிகளிலும் பிசியான நடிகையாக மாறி இருக்கிறார். சிவகார்த்திகேயனுடன் அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகும் ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சாய்பல்லவி அதிகம் மேக்கப் போடுவது இல்லை. பொது நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் மற்ற நடிகைகள் மாடர்ன் உடைகளில் பங்கேற்கும்போது சாய்பல்லவி மட்டும் பாரம்பரிய சேலை அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில், பட விழாக்களில் ஏன் சேலை அணிந்து கலந்து கொள்கிறீர்கள் என்ற கேள்விக்கு சாய்பல்லவி பதில் அளித்து கூறியதாவது:-

சேலை எனக்கு எப்பொதும் சவுகரியமான உடை. விழாக்கள், பொது நிகழ்ச்சிகள் ஒருவித அழுத்தம் தரக்கூடியவை. அதில் என்ன பேசவேண்டும் என்றுதான் யோசிக்க முடியும். உடை மீது கவனம் செலுத்த முடியாது. எனவேதான் விழாக்களில் சேலையை சவுகரியமான உடையாக உணர்கிறேன். அதிக மன அழுத்தங்கள் இருக்கும் இடங்களிலும் சேலை அணிவதையே விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.