இப்போ நல்லா தமிழ் பேசறேன்: நடிகை சைத்ரா!

கன்னட நடிகையான சைத்ரா ஜே.ஆச்சார், டோபி, சப்த சாகரதாச்சே எல்லோ – சைட் பி, பிளிங் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர், தமிழில் ராஜு முருகன் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் படம், ‘சித்தார்த் 40’ படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடித்து வரும் அவர் கூறும்போது, “இரண்டு தமிழ்ப் படங்களில் ஒப்பந்தமாகி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. டோபி, சப்த சாகரதாச்சே எல்லோ – சைட் பி படங்களில் என் நடிப்பைப் பார்த்துவிட்டு சித்தார்த் படத்துக்கு அழைத்தார்கள். இந்தப் படத்தில் மார்ச் மாதம் ஒப்பந்தம் ஆனேன். அதை வெளியில் சொல்லாமல் பாதுகாப்பது கடினமாக இருந்தது. எப்போதும் என் நடிப்பு பேசப்பட வேண்டும் என்று நினைப்பேன்.

அதன்படி அதுதான் இந்த வாய்ப்புகளைப் பெற்றுத் தந்திருக்கிறது. இதற்கு முன் என்னால் தமிழைப் புரிந்து கொள்ள முடியும். இப்போது படப்பிடிப்பில் தொடர்ந்து பேசி வருவதால் என்னால் நன்றாக பேச முடிகிறது. சித்தார்த் படம், குடும்பப் பின்னணியில் உருவாகிறது. அவருடனும் மீதா ரகுநாத்துடனும் இணைந்து நடிப்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்றார் சைத்ரா ஜே.ஆச்சார்.