வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகிவிடும்: கீர்த்தி சுரேஷ்!

வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகிவிடும் என்பதால் அதை புறக்கணித்துவிடுவோம் என்று கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார்.

தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநதி திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. கமர்ஷியல் படங்களுடன் தனி கதாநயாகியாகவும் படங்களில் அசத்தி வருகிறார். அப்படி அவர் தனி கதாநாயகியாக நடித்த மிஸ் இந்தியா, பென்குயின் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை எனினும் சாணிக் காயிதம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன், தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா போன்ற படங்கள் நல்ல வரவேற்பு பெற்றன.

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரகு தாத்தா’. பிரபல எழுத்தாளர் சுமன் குமார் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இப்படத்தில் எம். எஸ். பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய், ஆனந்த்சாமி, ராஜேஷ் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். ஒய். யாமினி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ரகு தாத்தா திரைப்படம் சுதந்திர நாளான வரும் ஆக. 15 ஆம் தேதி வெளியாகும். இதன் புரமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகை கீர்த்தி சுரேஷிடம், “நீங்கள் 20 வயது நபருடன் காதலில் இருப்பதாக வதந்திகள் பரவுகிறதே” எனக் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்து பேசிய நடிகை கீர்த்தி சுரேஷ், “தளபதி விஜய் சொன்னதுபோல் வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாகிவிடும் என்பதால் அதை புறக்கணித்துவிடுவோம். ஆனால் அதேசமயம் எனது நடிப்பு குறித்த விமரசனங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். நடிகையாக என்னை மேம்படுத்திக்கொள்ள ஆர்வமாகவும் இருக்கிறேன்” என்றார்.

கீர்த்தி சுரேஷ் பற்றிய திருமண வதந்திகள் பல வருடங்களாகவே வந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.