‘பான் இந்தியா’வுக்காக ஆங்கில தலைப்பு வைக்க வேண்டியதாகி விட்டது: வெங்கட் பிரபு!

‘பான் இந்தியா’வுக்காக ஆங்கில தலைப்பு வைக்க வேண்டியதாகி விட்டது என்று வெங்கட்பிரபு கூறினார்.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம், ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). பிரசாந்த், பிரபுதேவா, மோகன், ஜெயராம், அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, யோகி பாபு , வைபவ் உட்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஏஜிஎஸ் சார்பில் கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் தயாரித்துள்ளனர்.

செப்.5-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில், படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, வெங்கட்பிரபு கலந்துகொண்டனர்.

படம் பற்றி வெங்கட் பிரபு கூறும் போது, “ஏஜிஎஸ் நிறுவனத்தின் 25-வது படத்துக்காக விஜய்யுடன் இணைந்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்தை அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் தொடங்கினோம். உலகத்தில் சிறந்த தொழில் நுட்ப நிறுவனமான ‘லோலா’ உடன் இணைந்தோம். இந்நிறுவனம் ஏராளமான ஹாலிவுட் திரைப்படங்களில் பணியாற்றியிருக்கிறது. இந்தப் படத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைய உண்டு.

திலீப் மாஸ்டர் கடுமையாக உழைத்திருக்கிறார். விஜய் சாரை இது போன்றதொரு கமர்ஷியலான படத்தில் பார்க்கவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அது நிறைவேறி இருக்கிறது. ‘பான் இந்தியா’வுக்காக ஆங்கில தலைப்பு வைக்க வேண்டியதாகி விட்டது. இது அரசியல் படமல்ல. விஜய் சார், எப்போதும் கதையில் தலையிட மாட்டார். இந்த இடத்தில் பன்ச் டயலாக் வேண்டும் என்றோ, அரசியல் வசனம் வேண்டும் என்றோ அவர் யாரிடமும் சொன்னதில்லை. என்னிடமும் அப்படி கேட்டது இல்லை. இதில் சிலர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர்’’ என்றார்.