பரியேறும் பெருமாள் பிடிச்ச அளவிற்கு கர்ணன், மாமன்னன் ஏன் பிடிக்கல?: பா.ரஞ்சித்!

மாமன்னன் படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் வாழை என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் பேசியது இணையத்தில் படு வைரலாகி வருகின்றது

தமிழ் சினிமாவில் தன் படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியிலும் சமூகம் மத்தியிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடிய இயக்குனர்களில் ஒருவர் தான் பா.ரஞ்சித். வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பா.ரஞ்சித் அட்டகத்தி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தினேஷ் நடிப்பில் வெளியான அப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதன் பிறகு கார்த்தியை வைத்து மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கினார் ரஞ்சித். இப்படம் தான் பா.ரஞ்சித்திற்கு ஒரு அடையாளமாக அமைந்தது என்றே சொல்லலாம். 2014 ஆம் ஆண்டு வெளியான மெட்ராஸ் திரைப்படம் ரஞ்சித்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன் மூலம் சூப்பர்ஸ்டார் ரஜினியை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார் ரஞ்சித்.

ரஜினியை வைத்து கபாலி என்ற திரைப்படத்தை இயக்கிய ரஞ்சித்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்தது. இருந்தாலும் வசூலை பொறுத்தவரை கபாலி மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து ரஜினியை வைத்து காலா என்ற படத்தை இயக்கினார் ரஞ்சித். ரஜினியை வைத்து அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கும் அறிய வாய்ப்பினை பெற்றார் பா.ரஞ்சித். கபாலி மற்றும் காலா ஆகிய படங்கள் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக இருந்தாலும் கலவையான விமர்சனங்களை தான் சந்தித்தது. அதன் பிறகு ஆர்யாவை வைத்து சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கி தரமான கம்பேக் கொடுத்தார் ரஞ்சித்.

இந்நிலையில் பா.ரஞ்சித் மற்றும் சீயான் விக்ரம் கூட்டணியில் உருவான தங்கலான் திரைப்படம் சமீபத்தில் திரையில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. என்னதான் இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மாபெரும் வசூலை ஈட்டி வருகின்றது. சமீபத்தில் தான் தங்கலான் படக்குழு வெற்றி விழாவை கொண்டாடியது. இதையடுத்து பா.ரஞ்சித் மாரி செல்வராஜின் வாழை பட விழாவில் பேசியது தான் தற்போது வைரலாகி வருகின்றது.

பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி வெற்றிகண்டவர் தான் மாரி செல்வராஜ். அதைத்தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் மற்றும் உதயநிதியை வைத்து மாமன்னன் ஆகிய படங்களை இயக்கினார். தற்போது தன் சொந்த தயாரிப்பில் வாழை என்ற திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கும் நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ரஞ்சித் பேசுகையில், பெரியேறும் பெருமாள் நல்ல படம் என்கின்றனர். அப்போது கர்ணன் மற்றும் மாமன்னன் நல்ல படங்கள் கிடையாதா? பெரியேறும் பெருமாள் படம் அனைவருக்கும் பிடித்தது. ஆனால் கர்ணன் மற்றும் மாமன்னன் திரைப்படம் ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை. ஏனென்றால் பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் ஹீரோ திருப்பி அடிக்கமாட்டார். ஆனால் கர்ணன் மற்றும் மாமன்னன் திரைப்படத்தில் ஹீரோ திருப்பி அடிப்பார். ஹீரோ திருப்பி அடிப்பதால் ஒரு சிலருக்கு இப்படம் பிடிக்காமல் போயிட்டது போல என்றார் பா.ரஞ்சித். தற்போது இவர் பேசிய இந்த கருத்து தான் இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.