நான் அச்சு ஊடகத்தில் எழுதியதை மாரி தற்போது சினிமாவாக எடுத்திருக்கிறார்: சோ. தர்மன்!

வாழை படத்தின் கதை ஏற்கனவே எழுத்தாளர் சோ.தர்மன் சிறுகதையாக எழுதியுள்ளதால் இந்தப் படம் அந்த சிறுகதையை வைத்து காப்பியடிக்கப்பட்டதா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்ததாக வாழை என்கிற படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளியான வாழை திரைப்படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தில் நிகிலா விமல், கலையரசன், திவ்யா துரைசாமி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இயக்குநர் பாலா, மிஷ்கின், மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டியுள்ளார்கள்.

இந்நிலையில் இந்தப் படத்தின் கதை ஏற்கனவே எழுத்தாளர் சோ.தர்மன் சிறுகதையாக எழுதியுள்ளதால் இந்தப் படம் அந்த சிறுகதையை வைத்து காப்பியடிக்கப்பட்டதா என்ற சர்ச்சை எழுந்துள்ளது. இது குறித்து எழுத்தாளர் சோ.தர்மன் தனது முகநூல் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள். வாழை படம் பாருங்கள். உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று. இன்று படம் பார்த்தேன். என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி. வாழைதான் பிரதான விவசாயம். நான் அங்கு போகும் போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தை பார்த்து எழுதியதுதான் என்னுடைய “வாழையடி..” என்கிற சிறுகதை.

என் கதையில் லாரி, டிரைவர், கிளீனர், இடைத்தரகர், முதலாளி, சிறுவர்கள், சிறுமிகள், அவர்கள் படுகின்ற கஷ்டம், கூலி உயர்வு எல்லாம் உண்டு. ஆனால் டீச்சர், கர்ச்சீப், காலாவதியாகிப் போன பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது.

வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என்கதை இலக்கியமாகவே நின்று விட்டது. இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன். ஒருபடைப்பாளி என்கிற வகையில் கர்வமும் கொள்கிறேன். இச்சிறுகதை என்னுடைய “நீர்ப் பழி” என்கிற சிறுகதைத் தொகுப்பில் இரண்டாம் கதையாக இடம் பெற்றிருக்கிறது.

கிராமங்களில் வாழையைப் பற்றி ஒரு சொலவடை உண்டு. “வாழை வாழவும் வைக்கும். தாழவும் வைக்கும்.” என்னை வாழை வாழ வைக்கவில்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த சோ. தர்மன், “மாரி செல்வராஜ் என்னுடைய கதையை திருடிவிட்டார் எனக் கூறவில்லை. அவர் படிக்காமல்கூட இருந்திருக்கலாம். ஆனால் கரு ஒன்று. அதனை 10 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்திருக்கிறேன் என்ற பெருமை இருக்கிறது. நான் அச்சு ஊடகத்தில் எழுதியதை மாரி தற்போது சினிமாவாக எடுத்திருக்கிறார். நாங்கள் பேசிய பிரச்னை ஒன்று. ஆனால், ஊடகம் மட்டுமே வேறு” எனக் கூறியுள்ளார்.