கேரவனில் கேமரா பொருத்தி ரசித்த கும்பல்: நடிகை ராதிகா குற்றசாட்டு!

மலையாள திரையுலகில் நடிகர்கள், நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ஹேமா கமிட்டியின் அறிக்கையில் இடம்பெற்ற தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில் தான் மலையாள படப்பிடிப்பின்போது கேரவனில் ரகசிய கேமராவை வைத்து, நடிகைகள் உடை மாற்றுவதை ஆண்கள் பார்த்ததாக நடிகை ராதிகா கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார்.

மலையாள திரையுலகில் நடிகர்கள், நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பற்றி எரிய தொடங்கி உள்ளது. இதுதொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிட்டி விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்தது. 2019ல் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் இடம்பெற்ற தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. மலையாள திரையுலகம் 15 பேர் கொண்ட மாபியாக்களின் கையில் இருக்கிறது. அரை குறை ஆடையுடன் நடிக்க கட்டாயப்படுத்துவதாகவும் நெருக்கமான, முத்தமிடும் காட்சிகளை அதிக முறை காட்சிப்படுத்தப்படுத்துவது. செல்போனில் தொடர்பு கொண்டு பாலியல் ரீதியாக பேசுவது உள்பட பல குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் வெளியான நிலையில் ஒவ்வொரு நடிகைகளும் தாங்கள் சந்தித்த பிரச்சனைகள் பற்றி வெளிப்படையாக கூறி வருகின்றன. இதனால் நாள்தோறும் இந்த விவகாரம் பற்றிய பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து போலீஸ் ஐஜி தலைமையில் 7 பேர் கொண்ட சிறப்பு விசாரணை குழு விசாரணை மேற்கொண்டு வருகிறது. மலையாள சினிமாவை போலவே தமிழ் சினிமாவிலும் பல நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருப்பதாக பல நடிகைகள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். இதனால் நாள்தோறும் இந்த விவகாரம் புதிய புதிய சர்ச்சையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில் தான் நடிகை ராதிகா தற்போது அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நடிகை ராதிகா, ‛‛நடிகைகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பது மலையாள சினிமாவில் மட்டுமில்லை, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து இடத்திலும் உள்ளது. மலையாள படம் ஒன்றின் படப்பிடிப்பின் போது, அங்கு இருந்த ஆண்கள் கூட்டமாக அமர்ந்து கொண்டு போனைப்பார்த்து சிரித்துக்கொண்டு இருந்தார்கள். நான் அதைப்பார்த்துவிட்டு கடந்து சென்று விட்டேன். பிறகு விசாரித்தேன். அப்போது தான் கேரவனில் ரகசியமாக கேமரா வைத்து, நடிகைகள் உடை மாற்றுவதை பார்த்துக்கொண்டு இருந்தார்கள் என்பது தெரிந்தது. இதனால் நான் கேரவனில் உடைகளை மாற்றாமல் ஹோட்டல் அறைக்குச் சென்று உடை மாற்றினேன். இது குறித்து சக நடிகைகளுக்கும் சொல்லி எச்சரித்தேன். அதுமட்டுமின்றி கேரவன் ஆட்களை அழைத்து செருப்பால் அடிப்பேன் என்று எச்சரித்து வந்தேன். சினிமாவில் சிஸ்டமே தவறாக இருக்கிறது” என்றார்.

இவரது இந்த பேட்டி தற்போது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தான் நடிகை ராதிகாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது மலையாள நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். தற்போது நடிகை ராதிகா மலையாள திரைப்பட படப்பிடிப்பின்போது கேரவனில் கேமரா பொருத்தி இருப்பது பற்றி பேசியுள்ளது தொடர்பாக அவரிடம் நேரடியாக விசாரித்து கூடுதல் தகவல்கள் பெற சிறப்பு விசாரணை குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.