அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு ஒத்துவராததால் நடிகையை படத்திலிருந்து நீக்கிய நகுல்?

அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு ஒத்துவராததால் படத்திலிருந்து புதுமுக நடிகையை நடிகர் நகுல் நீக்கினார் என வாஸ்கோடகாமா படத்தின் இணை இயக்குனர் சந்துரு புகார் கூறியுள்ளார்.

நகுல், அர்த்தனா பினு உள்பட பலர் நடித்த படம் ‘வாஸ்கோடகாமா’. இப்படம் சமீபத்தில் திரைக்கு வந்தது. இப்படத்தை ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கினார். இதில் இணை இயக்குனராக சந்துரு என்பவர் பணியாற்றினார். அவர் கூறியிருப்பதாவது:-

வாஸ்கோடகாமா படத்தில் 2 வருடங்களாக பணியாற்றினேன். இப்படத்துக்காக எனது கடின உழைப்பை செலுத்தினேன். ஆனால் நகுலால் எனது உழைப்பெல்லாம் வீணாகிவிட்டது. அதனால்தான் அவரைப் பற்றிய திடுக்கிடும் உண்மைகளை வெளி உலகத்துக்கு கொண்டு வருகிறேன். ‘வாஸ்கோடகாமா’ படத்தில் முதலில் நடிக்க இருந்தவர் புதுமுக நடிகை ஒருவர்தான். அவர் சில நாட்கள் படத்தில் நடித்தார். ஆனால் அவர் அட்ஜெஸ்ட்மென்ட்டுக்கு ஒத்துவரவில்லை என்பதற்காக படத்திலிருந்து அவரை நகுல் நீக்கச் சொல்லிவிட்டார். கடைசியாக ஒருமுறை அந்த நடிகையிடம் பேசிப்பார்க்கலாம் என அவரை ஆபீசுக்கு அழைத்தோம். அப்போது நானும் இயக்குனர் கிருஷ்ணனும் இருந்தோம். அந்த நடிகை எப்போதுமே தனது தந்தையுடன்தான் படப்பிடிப்புக்கு வருவார். இது நகுலுக்கு பிடிக்காது. ஆபீசுக்கு வந்தபோதும் தனது தந்தையுடன்தான் வந்தார். இதனால் அவரிடம் அட்ஜெஸ்ட்மென்ட் பற்றி பேச முடியவில்லை. இதை நகுலிடம் சொன்னதும் கடும் கோபம் அடைந்தவர், அந்த நடிகையை படத்திலிருந்து நீக்கச் சொல்லிவிட்டார்.

அதன் பிறகு சுனேனாதான் தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என அடம் பிடித்தார். சுனேனா இந்த கேரக்டருக்கு சரியாக பொருந்துவார் என்றும் கூறிவந்தார். சில காரணங்களால் அவர் இதில் நடிக்க முடியவில்லை. பிறகு அர்த்தனா பினுவை ஹீரோயினாக தேர்வு செய்தோம். ஒருமுறை படப்பிடிப்புக்கு மேக்அப் டச்சப் கேர்ள்ஸ் என சில இளம்பெண்களை நகுல் அழைத்து வந்தார். பிறகு அவர்களுடன் நெருக்கமாக பழகினார். ஒரு நாள் படப்பிடிப்பில் இருந்தபோது அதிகாலை 3 மணிக்கு என்னை அழைத்து, ஆணுறை வாங்கி வரும்படி நகுல் வற்புறுத்தினார். நான் வேலையாக இருக்கிறேன். முடியாது என கறாராக சொல்லிவிட்டேன். உடனே என்னை படத்திலிருந்து நீக்கும்படி இயக்குனரிடம் சொல்லிவிட்டார். பிறகு படம் வெளியானபோது எனது பெயரையும் படத்திலிருந்து நீக்கிவிட்டார். இவ்வாறு சந்துரு கூறினார்.