நயன்தாராவின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டது!

நடிகை நயன்தாராவின் எக்ஸ் கணக்கு கிரிப்டோ விஷமிகளால் சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பிரபலங்களின் கணக்குகள் ஹேக் செய்யப்படுவது வழக்கமான ஒன்று. சமீபத்தில் பிரபல கால்பந்து வீரர் எம்பாப்வேயின் எக்ஸ் கணக்கு ஹேக் செய்யப்பட்டு அதில் மெஸ்ஸியை கிண்டல் செய்து பல பதிவுகள் பதிவிடப்பட்டு சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை நயன்தாராவின் எக்ஸ் கணக்கு கிரிப்டோ விஷமிகளால் சிறிது நேரம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. கிரிப்டோ தொடர்பான இரண்டு பதிவுகள் நயன்தாராவின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டன. பின்னர் அப்பதிவுகள் நீக்கப்பட்டன. தற்போது நயன்தாராவின் எக்ஸ் கணக்கு மீட்கப்பட்டதாகத் தெரிகிறது.

இது குறித்து நயன்தாரா, “எனது எக்ஸ் பக்கம் ஹேக் செய்யப்பட்டது. எதாவது புதியதாக பதிவுகள் தென்பட்டிருந்தால் அதைப் பொருட்படுத்தவேண்டாம்” என தற்போது கூறியுள்ளார்.

நடிகை நயன்தாரா ஏற்கனவே டெஸ்ட், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, மலையாள படமொன்றும் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன். மேலும், லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநரான விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். இந்தப் படங்களின் வரிசையில் 5ஆவதாக டாக்ஸிக்கும் இடம் பிடித்துள்ளது.