விஜய்யின் 69-வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது!

விஜய் நடிக்கும் 69-வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிக்கும் 69-வது படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் வெங்கட் நாராயணா படத்தை தயாரிக்கிறார். முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட உள்ள நிலையில், இது அவரது கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படம் குறித்து வெளியிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ போஸ்டரில், நீல வண்ண பின்னணியில், கையில் தீப்பந்தம் ஏந்தியிருப்பது போல காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அதில், “ஜனநாயகத்தில் ஒளி ஏற்றுபவர்” என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் படம் அரசியல் தன்மை கொண்ட படமாக இருக்கும் என்பதை உணர்த்துகின்றன. படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த எந்த அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. இருப்பினும் படத்தில் சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தி நடிகர் பாபி தியோல் விஜய்க்கு வில்லனாக நடிப்பார் என கூறப்படுகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்தப் படம் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.