நடிகர் கார்த்தியின் 29-வது படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது!

நடிகர் கார்த்தி ’96’ திரைப்பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் ’மெய்யழகன்’ படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கார்த்தியின் 27-வது திரைப்படமான மெய்யழகன் வருகின்ற செப். 27 அன்று வெளியாகவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, தன்னுடைய 28 வது படமாக நலன் குமாரசாமி இயக்கத்தில் ’வா வாத்தியார்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கள் வெளியீடாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு அடுத்ததாக, கார்த்தி தன்னுடைய 29 வது படத்தில் ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் இதற்கான அறிவிப்பை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளது. இந்தப் படம் அடுத்தாண்டு திரைக்கு வரும் என்று அறிவிப்பு போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.