தனுஷ் இயக்கத்தில் நடிக்கிறார் ஷாலினி பாண்டே!

தனுஷ் இயக்கி வரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஷாலினி பாண்டே.

அனைத்து தடைகளைத் தாண்டி தனுஷ் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் தனுஷ் உடன் சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோர் நடித்து வருகிறார்கள். ஆகாஷ் தயாரித்து வருகிறார். இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ஆனால், ஷாலினி பாண்டே நடிப்பதை பலரும் ஆச்சரியமாக பகிர்ந்து வருகிறார்கள். ஏனென்றால், தமிழில் ‘100% காதல்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. அதனைத் தொடர்ந்து ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் நடிக்கும் போது பிரச்சினையானது. அந்தச் சமயத்தில் இந்தியில் முன்னணி தயாரிப்பு நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதனால் அவரால் ‘அக்னிச் சிறகுகள்’ படத்தில் நடிக்க முடியாமல் போனது சர்ச்சையானது.

இறுதியாக, ஷாலினி பாண்டே நீக்கப்பட்டு அவருடைய கதாபாத்திரத்தில் அக்‌ஷரா ஹாசன் நடித்துள்ளார். அந்தப் படம் இன்னும் வெளியாகவில்லை. தற்போது தனுஷ் இயக்கி வரும் படத்தில் நடிப்பதன் மூலம் மீண்டும் தமிழுக்கு திரும்பியிருக்கிறார் ஷாலினி பாண்டே. இந்தியில் அவர் நடித்த படங்கள் யாவுமே, அவருக்கு பெரியளவில் பெயர் வாங்கிக் கொடுக்கவில்லை. இதனால் மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.