இளையராஜாவுடன் ‘லப்பர் பந்து’ படக்குழு சந்திப்பு!

‘லப்பர் பந்து’ படக்குழுவினர், இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும், இளையராஜாவுக்கு படக்குழுவினர் நன்றி தெரிவித்தனர்.

அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ‘கெத்து’ தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள படம் ‘லப்பர் பந்து’. இந்தப் படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் ‘வதந்தி’ புகழ் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியும் நடித்துள்ளனர். மேலும் தேவதர்ஷினி, பால சரவணன் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கிராமத்து கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கடந்த செப்டம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே அபரிவிதமான வரவேற்பை பெற்றது.

இப்படத்தில் நடிகர் விஜயகாந்தின் ‘பொன்மனச் செல்வன்’ படத்தில் இளையராஜா இசையமைத்த ‘பொட்டு வச்ச தங்க குடம்’ பாடல் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்தப் பாடல் விஜயகாந்த் ரசிகரான தினேஷுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அவரின் காட்சிகளை ரசிக்கும்படி மாற்றியதில் இப்பாடலுக்கு பெரும் பங்கு உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் நடிகர்கள், தினேஷ், ஹரிஷ் கல்யாண், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து உள்ளிட்டோர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும், அவர் இசையமைப்பில் உருவான பாடலை பயன்படுத்தியதற்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து அந்தப் பாடலின் வெற்றிக் கொண்டாட்டம் குறித்தும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

‘லப்பர் பந்து’ திரைப்படம் இதுவரை ரூ.20 கோடி வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படம் ரூ.5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.