ஓர் அழகான சூழலில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் எண்ணம்: அரவிந்த்சாமி

ஓர் அழகான சூழலில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் எண்ணம் என்று அரவிந்த்சாமி கூறினார்.

கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘மெய்யழகன்’. பிரேம்குமார் இயக்கிய இந்தப் படம் செப்-27-ல் வெளியானது. இந்தப் படத்தின் வெற்றி விழாவை, நன்றி தெரிவிக்கும் நிகழ்வாக படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார். அப்போது நடிகர் அரவிந்த்சாமி கூறியதாவது:-

இதில் எனது நடிப்பை விட கார்த்தி நடிப்பை பத்திரிகைகள் பாராட்டியது பெருமையாக இருந்தது. இயக்குநர் என்ன விரும்பினாரோ அதை அப்படியே வெளிப்படுத்த நானும் கார்த்தியும் மற்றவர்களும் முயற்சித்தோம். படப்பிடிப்பில் நடிக்கச் செல்லும் முன் இந்தக் கதாபாத்திரம் இப்படித்தான் இருக்கும் என நினைத்துக் கொண்டு செல்வேன்.

உடன் நடிக்கும் மற்றவர்களின் நடிப்பைப் பார்த்து அதிலிருந்து சில விஷயங்களைக் கற்றுக்கொண்டு நடிப்பேன். நான் மற்றவர்களுக்குப் போட்டியாக நடிக்க வேண்டும் என நினைப்பதில்லை. நான் அதிக படம் நடிப்பதில்லை என்பது உங்களுக்கும் தெரியும். நான் எந்த போட்டியிலும் இல்லை. செய்யும் வேலையை ரசித்து செய்ய வேண்டும். இது போன்ற ஓர் அழகான சூழலில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என் எண்ணம். இவ்வாறு அவர் கூறினார்.