இயக்குநர் பா.ரஞ்சித் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தங்கலான்’. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஓடிடி வெளியீட்டுக்குப் பின் பாசிட்டிவ் விமர்சனங்களையும் காண முடிகிறது.
இந்நிலையில் பா.ரஞ்சித்தின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தது. ‘பிர்சா முண்டா’ என்ற இந்திப் படம் இயக்கவுள்ளார், ‘சர்பட்டா பரம்பரை 2’ இயக்கவுள்ளார் என பலரும் தெரிவித்து வந்தார்கள். ஆனால், இந்த இரண்டு படங்களையுமே பா.ரஞ்சித் இயக்கவில்லை. அடுத்ததாக ‘வேட்டுவம்’ என்ற படத்தினை அவர் இயக்கவுள்ளார். இதில் ‘கெத்து’ தினேஷ், ஆர்யா நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடிக்கிறார். மேஜிக்கல் ரியலிசம் எனப்படும் மாய யதார்த்தவாத திரைக்கதையில் இப்படம் உருவாகும் என கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்குகிறது.