சண்முக பாண்டியனின் ‘படை தலைவன்’ ட்ரெய்லர் வெளியானது!

விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள ‘படை தலைவன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சகாப்தம், மதுரை வீரன் படங்களைத் தொடர்ந்து விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்துக்கு ‘படை தலைவன்’ என தலைப்பு வைத்துள்ளனர். இதை, வால்டர், ரேக்ளா படங்களை இயக்கிய யு.அன்பு இயக்குகிறார். விஜே கம்பைன்ஸ் சார்பில் ஜகநாதன் பரமசிவம் வழங்கும் இந்தப் படத்துக்கு எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இளையராஜா இசை அமைக்கிறார். திரைக்கதை, வசனத்தை பார்த்திபன் தேசிங்கு எழுதியுள்ளார். கஸ்தூரி ராஜா, யாமினி சுந்தர், முனீஸ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர்.

இந்நிலையில் ‘படை தலைவன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ட்ரெய்லர் முழுக்க யானையுடனேயே இருக்கிறார் சண்முக பாண்டியன். அதிரடி ஆக்‌ஷனுக்கு பஞ்சமில்லாத காட்சிகள் நிரம்பிக் கிடக்கின்றன. இளையராஜாவின் பின்னணி இசை கவனம் ஈர்க்கிறது. யானைக்கும் மனிதனுக்கும் இருக்கும் பாசப் போராட்டமாக இப்படம் உருவாகியுள்ளதை ட்ரெய்லர் உணர்த்துகிறது.

ட்ரெய்லரின் இறுதியில், “நீ தங்க கட்டி சிங்க குட்டி” என்ற ‘பொட்டு வைச்ச தங்க குடம்’ பாடல் வரிகள் இடம்பெறுவதும், விஜயகாந்தின் கண்களை மட்டும் காட்டும் இறுதி ஷாட்டும் கவனிக்க வைக்கிறது. “உங்க அப்பா இப்போ இருந்திருந்தா உன்ன நம்பியிருக்குற உசுற காப்பாத்துன்னு சொல்லியிருப்பாரு” என்ற வசனம் விஜயகாந்தை குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவில்லை.