ஆன்மிக குரு என்பவர் யார்?: செல்வராகவன்!

ஆன்மிக குரு என்பவர் யார்? என்று இயக்குநர் செல்வராகவன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். நடிகர் தனுஷின் அண்ணனா இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, ஆயிரத்தில் ஒருவன் என பல திரைப்படங்களை அவர் இயக்கி உள்ளார். இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அவ்வப்போது அவர் பதிவிடும் வீடியோ மற்றும் கருத்துகளை ரசிகர்கள் கொண்டாடி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை சார்ந்த தத்துவங்களை அவர் பதிவிட்டு வருவது தான்.

இந்த நிலையில் தான் இயக்குநர் செல்வராகவன் இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் செல்வராகவன் மொத்தம் 1 நிமிடம் 55 வினாடிகள் வரை ஆன்மீகம் குறித்து அவர் பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

என்னங்க இது.. யாரோ ஒருவர் எதையோ உளறிக்கொண்டு நான் ஆன்மிக குரு என்று பேசினால் கண்டதை எல்லாம் பேசிக்கொண்டு உடனே நீங்கள் ஒப்புக்கொண்டு பெட்ஷிட் எல்லாம் எடுத்து கொண்டு நீங்களும் கண்ணை மூடிக்கொண்டு முன்பு போய் உட்கார்ந்து கேட்பீர்களா. உண்மையான குருவை நீங்கள் தேடிப் போக தேவையில்லை. அவரே உங்களை தேடி வருவார். உங்களுடைய சந்திப்பு தானாக நடக்கும். டிவியில் விளம்பரம் செய்து கொண்டு, மைக் எல்லாம் வைத்து கொண்டு யாரும் இருப்பது இல்லை.

உண்மையான குரு என்பவர் தன்னை வெளிப்படுத்தி கொள்ளவே மாட்டார். என்னங்க நீங்க அவ்வளவு காஞ்சிபோயா இருக்கீங்க.. தியானம் பண்றதற்கு. முதலில் ஒன்றை சொல்லி கொள்கிறேன். தியானம் தான் உலகத்திலேயே மிகவும் ஈஸியான விஷயம். உலகில் உள்ள எல்லா மதங்களும் போதிக்கிறது கடவுள் உங்களிடம் இருக்கிறான் என்பதை தான்.

இதற்கு புத்தர் சொல்லும் தியானம் தான் ஈஸியான வழி. நாசில் (மூக்கில் இருக்கும் துளைகள்) என்று சொல்வோம். அது காற்று செல்லும் இடமாகும். அதில் நினைப்பை வையுங்க. மூச்சு விடுவது, மூச்சு இழுக்கிறது பற்றியெல்லாம் கவலைப்படாதீங்க. அது எல்லாம் தன்னாலே நடக்கும். இடையில் வேறு ஏதேனும் நினைப்பு எல்லாம் வந்தால் அதனை அடக்க வேண்டும் என்று நினைக்காதீங்க.. அந்த நினைப்பு எல்லாம் தன்னாலே வரும். சிறிது நேரத்தில் தன்னாலே சென்றுவிடும். அப்புறம் மனசை நீங்க மீண்டும் கொண்டு வாங்க. புத்தர் வந்து இதை தான் சொல்கிறார். நீங்கள் நீச்சல் அடித்து கொண்டே இருந்தால் உங்களுக்கு நீச்சல் நன்றாக வந்துவிடும். இதற்கு மாற்று கருத்து ஏதேனும் இருந்தால் சொல்லுங்கள். நான் கேட்டு கொள்கிறேன். ஆனால் மாற்றுக்கருத்து என்பது எதுவும் இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பள்ளி நிகழ்ச்சியில் மகாவிஷ்ணு என்பவர் ஆன்மிகத்தை பற்றி சொற்பொழிவாற்றியிருந்தது பெரும் சர்ச்சையாகி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தான் இன்று இயக்குநர் செல்வராகவன் இப்படியான வீடியோ வெளியிட்டுள்ளார். இதனால் மகாவிஷ்ணுவுக்கு, செல்வராகவன் பதிலடி கொடுத்துள்ளாராக என்ற கேள்வியும் எழுந்துள்ளது.