என்னை பற்றி எல்லாம் தெரிந்தால் அப்படி சொல்ல மாட்டீர்கள்: அரவிந்த் சாமி

என்னை பற்றி எல்லாம் தெரிந்தால் அப்படி சொல்ல மாட்டீர்கள் என்று அரவிந்த் சாமி கூறியுள்ளார்.

நடிகர் கார்த்தியின் 27-வது படத்தை விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான ’96’ படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘மெய்யழகன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அரவிந்த்சாமி, கார்த்தி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூர்யா – ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்துள்ளார். கோவிந்தராஜ் படத்தொகுப்பு செய்கிறார்.

மெய்யழகன் படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 31ம் தேதி கோயம்புத்தூரில் உள்ள கொடிசியா வளாகத்தில் மிக பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது. இப்படம் வரும் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளநிலையில், படக்குழு புரொமோசன் பணிகளில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, நேற்று மெய்யழகன் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில், நடிகை ஸ்ரீதிவ்யா, நடிகர் அரவிந்த்சாமி, கார்த்தி உள்ளிட்ட படக்குழுவை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்வில் நடிகர் அரவிந்த்சாமி பேசுகையில், ‘என்னைபோல் மாப்பிள்ளை வேண்டும் என கேட்பவர்களுக்கு என்னுடைய நிஜ வாழ்க்கையை பற்றி தெரியாது என நினைக்கிறேன். படங்களில் என் கதாபாத்திரங்களை வைத்து நான் அப்படிதான் இருப்பேன் என நம்பிவிடுகின்றனர். ஆனால் நிஜத்தில் அப்படி இல்லை. சினிமாவில் ஒரு மேஜிக் இருக்கிறது. என்னை பற்றி எல்லாம் தெரிந்தால் நீங்கள் அப்படி சொல்ல மாட்டீர்கள்’ என்றார்.