தனியார் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு-மத்திய அரசிடம் வலியுறுத்தும் தமிழக அரசு

தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் என தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. முன்னதாக, சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு வெளியிடப்பட்டது.

அதில், தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், IIT, IIM, AIIMS உள்ளிட்ட அனைத்து மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும் OBC பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீடை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதிவாரி கணக்கெடுப்பை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்ந்து நடத்திட வேண்டும், மாநிலங்களின் தேவைக்கேற்ப இட ஒதுக்கீட்டின் அளவை நிர்ணயிக்கும் உரிமை அந்தந்த மாநிலங்களுக்கு வழங்கப்பட வேண்டும் – இதற்காக அரசியலமைப்பில் உரிய திருத்தம் கொண்டுவர வேண்டும். OBC இட ஒதுக்கீட்டில், வளமான பிரிவினரை ( Creamy Layer ) நீக்காமல் செயல்படுத்திட வேண்டும் எனவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வலையர், அம்பலக்காரர் இனத்தை சேர்ந்த மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்த “வலையர் அம்பலக்காரர் புனரமைப்பு வாரியம்” அமைத்திட ஆணையிடப்பட்டுள்ளதாகவும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.