ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி உக்ரைன் மக்களுடன் சந்திப்பு!

பிரபல ஹாலிவுட் நடிகையும், ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர் மக்கள் பிரிவின் சிறப்பு தூதருமான ஏஞ்சலினா ஜோலி போர் பாதிப்புக்குள்ளான உக்ரைன் நாட்டுக்கு திடீர் பயணம் மேற்கொண்டார்.

தற்போது உக்ரைன் நாட்டில் நடக்கும் போர் பாதிப்புகளுக்கு பிறகு ஒரு கோடியே 27 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நாட்டை விட்டு வெளியேறி, வெவ்வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்ததாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனில் போரினால் பாதித்த மக்களைப் பார்வையிட அங்கு சென்ற ஏஞ்சலினா ஜோலி, லிவிவ் நகரிலுள்ள பேக்கரிகளுக்கு திடீரென்று சென்று அங்குள்ள பொதுமக்கள் மற்றும் குழந்தைகளிடம் கனிவுடன் பேசி உற்சாகப்படுத்தினார்.

பிறகு ரயில் நிலையங்களில் பணியாற்றும் தன்னார்வலர்களிடம் பேசிய ஏஞ்சலினா ஜோலி, அவர்களிடம், போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை குறித்து கேட்டறிந்தார். அங்குள்ள சிறுவர், சிறுமியர்களுடன் கலகலப்பாகப் பேசி போட்டோ எடுத்துக்கொண்ட அவர் கூறுகையில், ‘இங்கு வசிக்கும் மக்கள் மற்றும் குழந்தைகளின் அதிர்ச்சியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய வலியை நான் உணர்கிறேன். யாராவது அவர்களை தேற்றினால், அது அவர்களுக்கு நல்லதொரு அமைதியை ஏற்படுத்தும்’ என்றார்.