இலங்கை மக்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி : விஜயகாந்த்

இலங்கை மக்களுக்கு தேமுதிக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. அத்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து இருக்கிறது. இலங்கையில் நிலவும் பொருளாதார சிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்கள் படகுகள் மூலமாக தமிழகத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகளை செய்திட நன்கொடைகள் வழங்கிடுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், முதல்-அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் தேமுதிக சார்பில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.