இலங்கைக்கு உதவ தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் 10 லட்சம் ரூபாய்!

இலங்கை மக்களுக்கு உதவ தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று கே.எஸ். அழகிரி கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி கூறியதாவது:

இலங்கை மக்களுக்கு உதவ நிதி வழங்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் வேண்டுகோள் விடுத்ததோடு, தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்திருப்பதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன். எப்பொழுதெல்லாம் இலங்கைத் தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் மத்தியில் ஆட்சி செய்கிற காங்கிரஸ் அரசு பல்வேறு உதவிகளைச் செய்து வந்திருக்கிறது.

அதைப் போல, இன்றைக்கு தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை நடத்தி வருகிற முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்கிற இன்னல்களைப் போக்கிடும் வகையில் நிவாரணப் பொருட்களை தமிழக அரசு சார்பில் வழங்குவதோடு, தி.மு.க.வின் சார்பில் நிதி வழங்குகிற முயற்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் துணை நிற்க விரும்புகிறது. அதன்படி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கே.எஸ். அழகிரி கூறினார்.