எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது: ராஜ்நாத் சிங்

வடக்கு எல்லையில் சீனாவின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது’ என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

கடந்த 2020ம் ஆண்டு மே 5ம் தேதி கிழக்கு லடாக் எல்லையில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதே போல் சீன தரப்பிலும் அதிக அளவில் உயிர் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில், எல்லை சாலைகள் அமைப்பின் 63வது எழுச்சி தினம் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு பேசியதாவது:

மனித நாகரிகப் பயணத்தில் சாலைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை எனவும், கல்வி, சுகாதாரம், வர்த்தகம், உணவு வழங்கல், ராணுவ தேவைகள், தொழில்துறை, சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கான பிற பணிகளை எட்டுவதற்கு சாலைகள் மற்றும் பாலங்களின் பங்கு முக்கியமாகும்.

அதிகளவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எல்லையில் கட்டுமான அமைப்பை பலப்படுத்த வேண்டும். எல்லை பகுதிகளை மேம்படுத்துவதற்கு எல்லை சாலைகள் அமைப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அரசு முயற்சி செய்து வருகிறது. நாட்டின் பாதுகாப்புக்காக இரவு, பகலாக பணியில் இருந்து வரும் பாதுகாப்பு படையினருக்கு அதிக சலுகைகள் வழங்குவதற்கு அரசு முன்னுரிமை கொடுக்கும்.

சமீப காலமாக வடக்கு எல்லையில் சீனாவின் நடவடிக்கை அதிகரித்துள்ளது. மலை பகுதிகளில் கட்டுமானங்களை மேற்கொள்வதில் சீனர்கள் கைதேர்ந்தவர்கள். இதனால், அவர்களால் பல்வேறு பகுதிகளுக்கு விரைந்து செல்ல முடிகிறது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.