கோவில் நிலத்தை தொட்டால் போராட்டம் வெடிக்கும்: எச்.ராஜா

இந்து கோவில்களை அழிப்பதற்கு தமிழக முதல்வரும், அமைச்சர் சேகர்பாபுவும் சேர்ந்து செயல்பட்டு வருகின்றனர், என பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் உள்ள திருக்கச்சி நம்பி மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று காலை சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுத்துள்ளது பற்றி இந்து ஆலய மீட்பு இயக்கம் சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் எச் ராஜா கூறியதாவது:

நாம ஏதோ கோவிலுக்கு போறோம் முடிஞ்சா தட்டில் காசு போடுவோம். இல்லை என்றால் பிரசாதமாக வாங்கி சாப்பிடுகிறோம். ஆனால் நாம் போகிற கோவில் ஒழுங்காக பராமரிக்கப்பட வேண்டிய சொத்துகள் முறையாக உள்ளதா என்பதை பார்க்கிறோமா? இதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த அமைப்பு. ஒரு கோடி கொடுத்துவிட்டு இந்த கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் பஸ் நிலையம் அமைத்துள்ளனர். பல கோடி மதிப்புள்ள நிலத்துக்கு ஒரு கோடி கொடுத்துள்ளனர். கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, அரசுக்கு சொந்தமான நிலம் என நினைக்கிறார்கள். அப்படி அல்ல தனிநபர்கள் கோவிலுக்காக தங்களது நிலங்களை தானமாக எழுதி கொடுத்துள்ளனர். இந்த கோவிலுக்கு சொந்தமான 31 ஏக்கர் நிலம் மெட்ரோ ரயிலுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 31 ஏக்கர் நிலத்தை தொட்டால் மிக பெரிய போராட்டம் வெடிக்கும். கோவிலுக்கு சொந்தமான நிலங்களை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடக்கூடாது.

இந்து கோவில்களை அழிப்பதற்கு தமிழக முதல்வரும், அமைச்சர் சேகர்பாபுவும் சேர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இந்த அரசு இரண்டு விஷயத்தில் வலுவான அறை வாங்கி உள்ளது. அயோத்தியா மண்டபத்தை அபகரித்த வழக்கு, பட்டின பிரவேசம் என இரண்டில் அறை வாங்கி உள்ளது. பாப்பான் சத்திரத்தில் குயின்ஸ்லேண்ட் ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை உடனடியாக மீட்க வேண்டும். அந்த இடத்தில் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அமைய உள்ளதாக போர்டு வைத்துள்ளனர். அது அமைக்க கூடாது. கோயில் நிலங்களில் அரசோ, காவல்துறையோ ஆக்கிரமிப்பு செய்ய முடியாது. இந்து கோவில்கள் அபகரிப்பு என்பதற்கு விரைவில் முற்றுப்புள்ளி வரும். இவ்வாறு அவர் கூறினார்.