இலங்கையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பி.யை அடித்துக் கொன்ற பொதுமக்கள்!

இலங்கையில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பி.யை பொதுமக்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு சந்தித்து வரும் வரலாறு காணாத நெருக்கடிக்கு பொறுப்பேற்று இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் பொதுமக்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். பொதுமக்களின் போராட்டத்தை ராஜபக்சே குடும்பத்தினர் பொருட்படுத்தாதன் காரணமாக, தலைநகர் கொழும்பு உள்ளிட்ட இடங்களில் இன்று போராட்டம் வெடித்தது. இதனையடுத்து வேறு வழியின்றி மக்கள் போராட்டத்துக்கு அடிப் பணிந்து மகிந்த ராஜபக்சே தமது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமது ராஜினாமா கடிதத்தை அவர் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு அனுப்பி உள்ளார்.

இதனிடை.யே, மகிந்த ராஜபக்சேவின் ராஜினாமாவால் ஆத்திரமடைந்த ஆளும்கட்சி எம்.பி.யான அமரகீர்த்தி அதுகோரலா, தலைநகர் கொழும்பு அருகே அரசுக்கு எதிராக போராடி வந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டார். இதில் போராட்டக்காரர்கள் மூன்று பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எம்பியின் இந்த செயலால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், நிட்டம்ரபுல என்ற இடத்தில் அவரது காரை நிறுத்தி. அமரகீர்த்தி அதுகோரலாவை ஆத்திரம் தீர அடித்தனர். கண்மூடித்தனமான இந்த தாக்குதலில் அதுகோரலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இலங்கையில் ஆளும் கட்சி எம்பி ஒருவர் பொதுமக்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் உலக அரங்கில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.