செவிலியர்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது: டிடிவி தினகரன்

சுரண்டப்படும் செவிலியர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தையும் பணிச்சூழலையும் அமைத்து தருவதற்கான சட்டங்களை ஆட்சியாளர்கள் கொண்டு வரவேண்டும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இன்று மே 12 ஆம் தேதி சர்வதேச செவிலியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு தரப்பினர் செவிலியர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ட்விட்டரில் செவிலியர்கள் தினத்தை முன்னிட்டு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-

தன்னலம் பாராது இரவு, பகலாக சேவையாற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் இனிய செவிலியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். நோயைக் குணப்படுத்துவதிலும் நெருக்கடியான நேரங்களில் உயிரைக் காப்பதிலும் செவிலியர்களின் பங்கு மகத்தானது. தாயன்போடு செவிலியர்கள் செய்திடும் சேவை போற்றி மதிக்கத் தக்கதாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த செவிலியர்களின் வாழ்வியல் சூழல் எப்படி இருக்கிறது என்பதை இந்த தினத்தில் யோசித்து பார்க்க வேண்டிய கடமை ஆட்சியாளர்களுக்கு இருக்கிறது.

குறைந்த ஊதியம்; அதிக வேலை என்று செவிலியர்களின் உழைப்பு சுரண்டப்படுவதை நம் கண்ணெதிரே பார்க்கிறோம். அதிலும் தமிழகத்தில் அதிக அளவிலான செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக பணியாளர்களாகவே இருக்கிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். செவிலியர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும்.

ஆண்டுக்கு ஒரு முறை வாழ்த்துவதோடு விட்டுவிடாமல் செவிலியர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தையும் பணிச்சூழலையும் அமைத்து தருவதற்கான சட்டங்களை ஆட்சியாளர்கள் கொண்டு வரவேண்டும். இதற்காக செவிலியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு வென்றிட வேண்டுமென வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.