ஆப்கனில் ஓட்டலில் ஆண்-பெண் சேர்ந்து சாப்பிட தடை!

ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. தற்போது ஹெராத் மாகாண நகரங்களில் ரெஸ்டாரண்ட், ஓட்டல்களில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் நிலவியதால் மக்கள் பெரும் துன்பத்தை சந்தித்தனர். இதையடுத்து அமெரிக்க படைகள் அங்கு சென்று முகாமிட்டு உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்தனர். இருப்பினும் அவ்வப்போது அங்கு தீவிரவாத சம்பவங்கள் அரங்கேறி வந்தன. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக வெளியேறின. இதையடுத்து தாலிபான்கள் உள்நாட்டு போரை துவக்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். 2021 ஆகஸ்ட் முதல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு முன்பு 1996 முதல் 2001 வரை ஆப்கனை தாலிபான்கள் ஆட்சி செய்தனர். அப்போது பெண்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் பயந்துபோன ஏராளமானவர்கள் நாட்டை விட்டு வெளியேறினர்.

இந்நிலையில் தான் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படாது என தாலிபான்கள் கூறினர். இதனால் தாலிபான்கள் மனம் திருந்திவிட்டதாக மக்கள் எண்ணினர். ஆனால் இது வெறும் பேச்சளவில் மட்டுமே இருந்தது. ஏனென்றால் அதிகாரத்தை கைப்பற்றிய சில மாதங்களிலேயே தாலிபான்கள் அடுத்தடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க துவங்கினர். குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. விமான பயணங்களில் பெண்கள் தனியாக பயணிக்க கூடாது. வேலைக்கு செல்லக்கூடாது. டிரைவிங் லைசென்ஸ் எடுக்க தடை. தனியே வெளியே நடமாடக்கூடாது. உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மறைக்கும் புர்கா அணிய வேண்டும் என பெண்களை வீட்டில் முடக்கும் வகையிலான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கு உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும் தாலிபான்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. தொடர்ச்சியாக தங்களின் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். சமீபத்தில் பூங்காக்களில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. அதாவது ஆண்கள், பெண்கள் தனித்தனியே தான் பூங்காக்களுக்கு செல்ல முடியும். வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களில் மட்டும் பெண்கள் பூங்காக்களுக்கு செல்ல முடியும். மற்ற 4 நாட்கள் ஆண்கள் செல்ல வேண்டும்.

இந்நிலையில் தான் தற்போது ஓட்டல், ரெஸ்டாரண்ட்களில் ஆண்கள், பெண்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கனில் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் மாகாணத்தில் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. கணவன்-மனைவி உள்பட எத்தகைய உறவாக இருந்தாலும் கூட ஆண்கள், பெண்கள் தனித்தனியே தான் அமர்ந்து சாப்பிட வேண்டும். இதுபற்றி ஆப்கனின் நல்லொழுக்கத்துறை அமைச்சகம் கூறுகையில், ‛‛உணவகங்களில் ஆண்கள், பெண்களை பிரித்து உணவு சாப்பிட அறிவுறுத்தப்பட்டுள்ளது ” என்றார்.