டெல்லியில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலி!

டெல்லி தீ விபத்தில் இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே இன்று மாலை 3 மாடி வணிகக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியானது. கட்டிடத்தில் இருந்து சுமார் 50 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்றும் தகவல் வெளியாகி இருந்தது. மேலும் காயங்களுடன் மீட்கப்பட்ட பலர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் டெல்லி தீ விபத்தில் இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், “இது மிகவும் வருத்தமான சம்பவம். முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள 4 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டு 8 பேர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை துணை ஆணையர் சமீர் ஷர்மா கூறுகையில், “இதுவரை 50 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று அவர் தெரிவித்தார்.

கிடைத்திருக்கும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், முதல் தளத்திலிருந்தே தீ பரவியிருக்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களை போலீஸ் காவலில் வைத்துள்ளனர். நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த 20 தீயணைப்பு வாகனங்கள் பல நேரம் போராடி கொழுந்துவிட்டு எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தன. இந்த விபத்துக்கான காரணம் குறித்து அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சி பதிவுகளை கொண்டு போலீசார் ஆராய்ந்து வருகின்றனர். வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 27 பேர் இறந்த சம்பவம் தலைநகர்வாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் டெல்லி வணிக கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.